பத்திரப்பதிவில் சின்ன தவறும் ஏற்படுத்தும் பெரிய சிக்கல்.. பதிவுத்துறை ஐ.ஜி. முக்கிய உத்தரவு
வேலூர்: வேலூர் மண்டல பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சார் பதிவாளர்களிடமும் ஊழியர்களிமும் பேசிய அவர், சார்பதிவாளர் அலுவலகத்துக்கு ஆவணங்கள் பதிவு செய்ய வருபவர்களிடம் ஊழியர்கள் அனைவரும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை தவறு இல்லாமல் விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பு அந்த ஆவணங்களை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். எழுத்துப்பிழை இல்லாமல் ஆவணங்கள் இருக்க வேண்டும். தலைப்பு எழுத்து எனப்படும் இனிஷியல் மாறினாலும் தலையெழுத்தே மாறிவிடும். அதேபோல் பெயரில் தவறு நடந்தாலும் சிக்கலாகிவிடும். அதேபோல் ஆதார் எண்ணில் தவறு இருந்தாலோ அல்லது பத்திரம் பதியும் சொத்து அளவுகளில் தவறு இருந்தாலும் சிக்கல் தான் வரும். பத்திரப்பதிவு செய்த பின்னர் தவறுகள் ஏற்பட்டால் அதனை திருத்தம் செய்ய வேண்டும் என்றால், திருத்தப் பத்திரம் (Rectification Deed) மூலம் சரிசெய்ய முடியும்.

முத்திரைச் சான்று
பெரிய மாற்றங்கள் தேவைப்பட்டால், முத்திரைச் சான்று (stamp duty) கூடுதலாக செலுத்தப்பட வேண்டிய நிலை வரும். இதற்காக பத்திரப்பதிவு செய்து சொத்து வாங்கியவர்கள் அலைய வேண்டியதிருக்கும். இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் சொத்து ஆவணங்களை பத்திரப்பதிவு செய்யும் போது, தவறுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவு செய்யும் போது தவறு
பத்திரம் பதிவு செய்யும் முன்பு, தெரு பெயர், விற்பவரின் தந்தை பெயர், முகவரியை மீண்டும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும். பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் பலர் ஆவணத்தவறுகளால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐ.ஜி. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்
வேலூர் மண்டல பதிவுத்துறை அலுவலகம் வேலூர் வேலப்பாடியில் அமைந்துள்ளது. இங்குதான் வேலூர் துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், வேலூர் சார்பதிவாளர் அலுவலகம், பதிவறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் மண்டல பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் திடீரென ஆய்வு நடத்தினார்.
வேலூர் மண்டல பதிவுத்துறை
தொடர்ந்து அவர் அங்குள்ள பதிவேடுகள் மற்றும் வேலூர் மண்டல பதிவுத்துறைக்கு இந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் கடந்தாண்டு ஈட்டிய வருவாய் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் ஐ.ஜி. காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications