காற்றில் பறந்த கள்ள நோட்டுகள்.. சென்னை நெடுஞ்சாலையில் ஆர்வமாக எடுத்த பொதுமக்கள்! கடைசியில் ட்விஸ்ட்
வேலூர்: வேலூரில் சாலையோரம் திடீரென ரூபாய் நோட்டுகள் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் கள்ள நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைக் கள்ள நோட்டுகளாக அடித்து அதைப் புழக்கத்தில் விடும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.
நீ பல லட்ச ரூபாய் பைக் வச்சிருக்க.. சாகசம் காட்டி அடுத்தவனை கெடுக்காத- டிடிஎப் வாசனுக்கு ரவி அட்வைஸ்
காற்றில் பறந்த நோட்டுகள்
வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலை பக்கம் இன்று காலை வந்த மர்ம கும்பல் ஒன்று காரை நிறுத்தி, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளைக் கொட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொஞ்ச நேரத்தில், அங்குக் காற்று அடிக்கவே அந்த ரூபாய் நோட்டுகள் பறக்கத் தொடங்கி உள்ளது. பணம் பறந்து வருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு லக் அடித்துவிட்டதாக நினைத்து, வண்டியை ஓரங்கட்டினர்.
வேலூர்
தேசிய நெடுஞ்சாலை என்றும் பார்க்காமல் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டுப் பறந்து சென்ற நோட்டுகளைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று தெரியாததால் போட்டிப் போட்டுக் கொண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர்.
ரூ.14.50 லட்சம்
அங்கு நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரித்த போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். இந்த கள்ள நோட்டுகளை போலீஸ் ஸ்டேஷன் எடுத்து வந்து எண்ணிப் பார்த்த போது, அதில் மொத்தம் ரூ.14.50 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இவை அனைத்துமே செல்லாத நோட்டுகள் என்றும் கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என்பதும் தெரியவந்தது.
கள்ள நோட்டுகள்
கள்ள நோட்டுகளை அடித்து நடுரோட்டில் இப்படி வீசி சென்ற கும்பல் யார் என்பதை அங்குள்ள சிசிடிவி கேமாரவை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் சென்ற வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், சிலர் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்ற நிலையில், அவை கள்ள நோட்டுகள் என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
மேலும், கள்ள நோட்டுகளை பொதுமக்கள் யாராவது எடுத்துச் சென்று இருந்தால் அதை போலீசாரிடமும் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அங்குள்ள வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது விழிப்புணர்வுடன் இருக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று கள்ள நோட்டுகள் ரோட்டில் வீசி சென்றுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.