வேலூரில் அலேக்காக நகர்த்தப்படும் வீடு! அடுத்தவர் நிலத்தில் கட்டியதால் வந்த வினை.. செம தொழில்நுட்பம்
வேலூர்: வேலூரில் தனது இடத்துக்கு பதில் அடுத்தவர் நிலத்தில் 1,500 சதுர அடியில் வீடு கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது அந்த வீட்டை இடிக்காமல் அப்படியே அருகே உள்ள நிலத்துக்கு நகர்த்தப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது ஏராளமான தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது என்றால் ஒரு பெரிய கட்டடத்தையே அப்படியே நகர்த்தி இன்னொரு இடத்தில் வைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இது ஜாக்கி தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு வடமாநிலங்களில் இந்த தொழில்நுட்பத்தில் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. தற்போது தமிழகத்திலும் ஆங்காங்கே இந்த தொழில்நுட்பம் என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டை பொறுத்தமட்டில் ஜாக்கி தொழில்நுட்பம் என்பது வீட்டை சில அடிகள் உயர்த்தி வைக்க தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் சாலைகள் உயரும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் என்பது பள்ளத்தில் இருப்பது போன்று தோற்றமளிக்கும். இதனால் எளிதில் மழை நீர் வீட்டுக்குள் நுழையும் சூழல் ஏற்படும். இத்தகைய சூழலில் தான் ஜாக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில அடி உயரம் வீடுகளை தூக்க முடியும். அதாவது வீட்டை இடித்து புதிதாக கட்ட அதிக தொகை தேவைப்படும்.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஜாக்கிகள் மூலம் வீட்டை அலேக்காக சில அடி உயரம் தூக்கி நிறுத்தி அதன் பிறகு கட்டடத்துக்கும் தரைக்கும் இடையே கட்டமைப்பை ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் வீடு உயர்ந்து விடும். இது ஒருபுறம் இருக்க ஜாக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டை அப்படியே இன்னொரு இடத்திலும் நகர்த்தி வைக்க முடியும். அந்த வகையில் தான்
வேலூரில் தனது இடத்துக்கு பதில் அடுத்தவர் நிலத்தில் 1,500 சதுர அடியில் வீடு கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது அந்த வீட்டை இடிக்காமல் அப்படியே அருகே உள்ள நிலத்துக்கு ஜாக்கி தொழில்நுட்பத்துடன் நகர்த்தப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது வேலூர் சத்துவாச்சேரியில் ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அதாவது சத்துவாச்சேரியில் ஒருவர் புதிதாக 1,500 சதுரஅடியில் வீடு ஒன்றை கட்டி முடித்து குடியேறினார். குடும்பத்துடன் அவர் அந்த வீட்டில் வசிக்க தொடங்கியபோது தான் ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. அதாவது அந்த வீட்டை கட்டியவர் தனது நிலத்தைவிட்டு அருகே இருந்த இன்னொருவரின் நிலத்தில் வீட்டை கட்டியது தெரியவந்தது. இது அவருக்கு பிரச்சனையை உருவாக்கியது.
இதையடுத்து வீட்டை இடித்தால் அதிக செலவு ஏற்படும் என நினைத்தார். இதனால் வீட்டை இடிக்காமலேயே ஜாக்கி தொழில்நுட்பத்துடன் அவர் தனது வீட்டை அருகே உள்ள சொந்த இடத்துக்கு நகர்த்த திட்டமிட்டார். இதற்காக சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை அணுகினார். அவர்களும் ஓகே சொன்ன நிலையில் தற்போது அந்த நபரின் வீடு தரையில் இருந்து 3 அடி உயரத்துக்கு ஜாக்கி உதவியுடன் தூக்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 142 ஜாக்கிகளை பயன்படுத்தி தரையில் இருந்து அந்த வீடு அப்படியே மேலே தூக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது முதலில் வீட்டில் சுவரை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு சுவரின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஜாக்கி வைத்து மேலே ஒன்றுபோல் தூக்கினார். கட்டடத்தின் முழு பளுவையும் ஜாக்கிகள் தாங்கிக் கொள்வதால் வீடு அப்படியே 3 அடி உயரம் வரை எழுந்து நிற்கிறது. இதையடுத்து அந்த வீடு தற்போதைய வீட்டு உரிமையாளரின் நிலத்தை நோக்கி ரோலர் பயன்படுத்தி நகர்த்தப்படும். அதன்பிறகு வீட்டை எங்கு வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் கீழே செங்கல், கான்கிரீட் அமைத்து அதன் மீது நகர்த்தப்பட்ட வீட்டை வைத்து ஒன்றாக இணைத்து விடுவார்கள்.
இந்த ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் வீட்டின் தரைத்தளம் மட்டுமே சேதமடையும். மற்றபடி மின் இணைப்பு, பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவர்கள் என எதுவும் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications