Durai Murugan:வேலூர் வீட்டுக்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்றே தெரியாது.. அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் 2 மணி நேரமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக சென்னையில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்றே தெரியாது என்று கூறினார்.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வேலூரில் உள்ள இல்லம் மற்றும் அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் இன்று காலையில் அமலாகத்துறை சோதனை செய்ய வந்துள்ளனர். ஆனால் அங்கு துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இல்லாததால் சோதனைக்கு வந்த அதிகாரிகள் 2 மணி நேரமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர் புரத்தில் இருக்கிறார். கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று 4 வாகனங்களில் சென்னையில் இருந்து 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்துள்ளன்னர். சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்புடன் கதிர் ஆனந்த் வீட்டில் அதிகாரிகள் உள்ளனர். இதற்கிடையே சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்து வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர் வேலூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடன் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், "வீட்டுக்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்றே எனக்கு தெரியாது. வீட்டில் யாரும் இல்லை. வீட்டு வேலைக்காரர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். இதனால் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அமலாக்கத்துறை சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.
முன்னதாக இன்று காலையில், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் ரூபாயும், பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் இருந்து 11 கோடி ரூபாயும் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தான் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications