சினிமா செய்தியை நான் பார்ப்பது இல்லை.. தவெக விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதில்
வேலூர்: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று ஆதவ் அர்ஜூனா பேசியதற்கும் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது' என்று பேசியிருந்தார். இதேபோன்று விஜய்யும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இன்று வேலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், யாருங்க பிறப்பால் முதல்வர் ஆனாங்க.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தானே முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆனாங்க.. மக்களாட்சி தான் நடக்கிறது. இந்த அறிவுகூட இல்லையா.. என்று பதில் அளித்தார். இதேபோன்று விஜய் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை" என்று பதில் அளித்தார்.
முன்னதாக நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்தியில் இருக்கின்ற ஒன்றிய அரசு மணிப்பூர் சம்பவம் பற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அவங்க தான் அப்படியென்றால், இங்க இருக்கிற தமிழக அரசு அதற்கு மேலாக இருக்கிறது. வேங்கை வயல் சம்பவத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை.
வெள்ளப் பாதிப்பின் போது சம்பிரதாயத்துக்கு ட்வீட் போடுவது, சம்பிரதாயத்திற்கு அறிக்கை விடுவது, சம்பிரதாயத்துக்கு வெள்ளத்தில் இறங்கி போட்டு எடுத்துக்கொள்வது என்று இல்லாமல், உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் எகத்தாளமாக கூட்ட்டணி கட்சிகள் இருக்கிறது என 200 தொகுதிகளில் வெல்வோம் என்று பேசுகிறார்கள்.
உங்களுக்கு மக்களோடு மக்களாக இருந்து ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். வரும் 2026 தேர்தலில் நீங்க நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும். இங்கு திருமாவளவன் அவர்கள் பங்கேற்க முடியாத அளவுக்கு கூட்டணி அழுத்தம் இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. திருமாவளவன் இங்கு பங்கேற்க வில்லை என்றாலும் அவரது மனம் இங்கு தான் இருக்கிறது. இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், சட்டசபை தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சில அதிமேதாவிகள், களத்திற்கே வராமல் தற்குறிகளாக பேசுகிறார்கள். 200 தொகுதிகள் அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications