வேலூரில் மகளிர் உரிமை தொகை கேட்ட மூதாட்டி.. ரேஷன் கார்டை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
வேலூர்: வேலூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருந்த ஏழை மூதாட்டியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப அட்டையை பயன்படுத்தி மர்ம நபர்கள் கார் வாங்கியதால் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள இரண்டே கால் கோடி ரேஷன் கார்டுகளில் பாதிப்பேருக்கு கிடைத்து வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்த 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிதியாண்டில் அரசு ஒதுக்கியுள்ள இந்த 13720 கோடி ரூபாய் தொகையினை வைத்து ஒரு கோடியே 14 லட்சத்து 33 ஆயிரத்து 33 பேருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்க முடியும். எனவே தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் எண்ணிக்கையான 1 கோடியே எட்டு லட்சம் என்பது ஒரு கோடியே 15லட்சம் என்கிற அளவில் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
அதாவது இந்த ஆண்டு புதிதாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் எனில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஆர்வமுடன் இருக்கிறார்கள். கார் வைத்திருப்பதாக கூறியும், குடும்பத்தில் ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக கூறியும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விதவையர் தொகை வாங்குவோர், முதியோர் உதவி தொகை வாங்கவோருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.. இந்ந சூழலில் வித்தியாசமான சிக்கலை வேலூர் மூதாட்டி சந்தித்துள்ளார். அவரது குடும்ப அட்டையை பயன்படுத்தி மர்ம நபர்கள் கார் வாங்கியதால் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் தவிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
வேலூர் வேலப்பாடி சேர்வை முத்துசாமி நகர் பகுதியை சேர்ந்த 62 வயதாகும் கீதா, நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது பற்றி புகார் மனு அளித்தார். மூதாட்டி கீதா கூறுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்கள்.. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, உங்கள் பெயரில் கார் வாங்கப்பட்டுள்ளதால் உங்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.
இதனால் கடும்அதிர்ச்சி அடைந்த நான், எங்கள் குடும்பத்தில் எந்த காரும் இல்லை என்றார். ஆனால் எனது குடும்ப அட்டை எண்ணை பயன்படுத்தி மர்ம நபர்கள் கார் வாங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நான் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தேன். போலீஸ் அதிகாரிகள் என்னை வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேசனுக்கு போக சொன்னார்கள்.
ஆனால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் என்னை ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் வாகனத்திற்கான பதிவு எண்ணை வழங்கவில்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைத்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள். இது பற்றி புகார் அளித்து 3 மாதங்கள் ஆன நிலையில், மாவட்ட காவல்துறை தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னை தொடர்ந்த அலைய விடுகிறார்கள்.
கடந்த மாதம் தேர்தல் வேலை என்று அயை வைத்தார்கள். எனவே இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பெயரில் கார் வாங்கி மோசடி செய்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூதாட்டி கீதா கூறினார்.












Click it and Unblock the Notifications