அரக்கோணத்தில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு! அரசு மருத்துவமனையில் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த பாம்பு
வேலூர்: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஒரு நல்ல பாம்பு சுற்றி சுற்றி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சிலர் அந்த பகுதியில் இருந்தே அலறி ஓடிவிட்டார்கள்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் என்ன நடந்தது?
அரக்கோணம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இலவசம் அல்லது குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவைகள் பெற முடிகிறது.

இது அடிப்படை மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழங்கும் முழுமையான அரசு சிகிச்சை மையமாக செயல்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களிலும் நகர பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெறுவதால் மருத்துவமனை வளாகம் எப்போதுமே பிஸியாகவும், கூட்டமாகவும் இருக்கும்...
அரக்கோணம் அரசு மருத்துவமனை
அரக்கோணம் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்..
இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே நல்ல பாம்பு சுற்றி சுற்றி அதே பகுதியில் வருவதை, மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களுடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர்..
இதையடுத்து இந்த தகவல் மருத்துவமனை முழுவதும் காட்டுத் தீ போல் பரவி விடவும், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுவற்றோரம் பாம்பு
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. நல்ல பாம்பு, சுவற்றின் ஓரமாக ஊர்ந்து சென்றதால், முதலில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருந்து.. பிறகு நீளமான உபகரணங்களை கொண்டு வந்து சுவற்றோரம் சென்று கொண்டிருந்த நல்ல பாம்பை, சுமார் 30 நிமிடங்கள் கழித்து பத்திரமாக பிடித்தனர்.
பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டதை அறிந்ததும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்ட நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் அருகிலுள்ள காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
நல்ல பாம்பு
இது குறித்து தீயணைப்பு துறையினர் சொல்லும்போது, "அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நல்ல பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்த உடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம். மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, பாதுகாப்புதான் முதன்மையானதாக பார்க்கப்படும்..
பாம்பு சுமார் 30 நிமிடங்கள் கவனமாக செயல்பட்டு பாம்பை எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக மீட்டோம். அருகிலுள்ள காப்புக் காட்டில் கொண்டுபோய் பாம்பை விடுவித்தோம். பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் பீதி அடையாமல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு பாம்பை கொல்லும் முயற்சியில் இறங்க கூடாது" என்றனர்..
பாட்டிலில் சாரை பாம்பு
நேற்றைய தினம் புதுச்சேரி அரசு மருத்துவமனை கட்டிட வளாகத்திலும் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.. இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அருகில் பைக் நிறுத்தும் இடத்தில் பாம்பு ஊர்ந்து செல்வதை அங்கிருந்தவர்கள் பார்த்து அச்சமடைந்துள்ளனர்..
அப்போது அருகிலிருந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் என்பவர், 2 நீளமுள்ள அந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார்.. பிறகு வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் இந்த பாம்பை பத்திரமாக ஒப்படைத்தார்.
சமீப காலமாகவே அரசு மருத்துவமனை கட்டிட வளாகங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, நோயாளிகள், அவர்களின் உறவினர்களிடையே பெரும் அச்சத்தை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications