பஸ்ஸில் பெண்களை தரக்குறைவாக நடத்தும் நடத்துனர்களை அடியுங்கள்... பார்த்துக்கொள்கிறேன் -துரைமுருகன்
வேலூர்: அரசுப் பேருந்துகளில் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாக நடத்தினால் அவர்கள் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் என்பதால் பெண்கள் பெருமளவில் அதில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் டிப்போவில் உரிய வசூல் இலக்கை காட்ட முடியாத கோபத்தில் பல இடங்களில் பெண் பயணிகளிடம் நடத்துநர்கள் சிடுசிடுவென்று எரிந்து விழும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இது குறித்த புகாரை பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சர் துரைமுருகனிடம் பெண்கள் முறையிட்டதால் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிரிப்பலை
மேலும், தொடர்ந்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக காட்பாடி அருகே உள்ள ஆரிய மோட்டூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், கிராமத்திற்கு சரியான தலைவரை தேர்வு செய்யாவிட்டால், தெருவுக்கு விளக்கு போடும் பணத்தில் அவர் தனது மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார் எனக் கூறினார். அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சு அங்கு சிரிப்பலையை எழுப்பியது.

அரசு நிதி
பஞ்சாயத்து தேர்தல் தானே என திமுகவினர் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் பஞ்சாயத்து தலைவர் தான் கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுபவர்கள் என்றும் அவர்களிடம் தான் அரசின் நிதி ஒப்படைக்கப்படும் என்பதால் சரியான நபரை தலைவராக தேர்வு செய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்து வெறும் 150 நாட்கள் மட்டும் தான் ஆவதாகவும், பிரசவம் நடைபெறுவதற்கே 10 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் போது 4 மாதத்தில் திமுக ஆட்சி என்ன செய்தது என யாரும் கேட்க வேண்டாம் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கும் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறிய அவர், பேருந்துகளில் பெண்களை நடத்துநர்கள் இனி தரக்குறைவாக நடத்தினால் அடியுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆவேசம் காட்டினார்.

எச்சரிக்கை
அரசுப் பேருந்தை தங்கள் அப்பன் வீட்டுச் சொத்து போல் நினைத்து சில நடத்துநர்கள் செயல்படுவது சரியில்லை என்றும், இனி பெண்களை முறைத்தாலோ, தரக்குறைவாக நடத்தினாலோ உரிய நடத்துநர் குறித்த விவரத்தை தன்னிடம் சொன்னால் தாம் அவரை வேலையை விட்டு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைக்கேட்ட பெண்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications