எனது தெரு சரியில்லை! இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனது இல்லம் அமைந்துள்ள தெரு சரியில்லை என, மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி நடக்கும் திமிரில் பாஜகவினர் வரம்புமீறி நடந்து வருவதாகவும் நியாயமாக பார்த்தால் அதிமுகவை கண்டித்து தான் பாஜகவினர் போராட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் டெண்டர் விடப்பட்ட பணிகள் எதையும் ஒப்பந்ததாரர்கள் முறையாக செய்துமுடிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

பாஜகவினர் முற்றுகை
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் சுஜாதா அறையை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வரம்பு மீறிய செயல் எனக் கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளதாகவும் ஆனால் எந்த தருணத்திலும் அத்துமீறலிலோ, வரம்பு மீறியோ நடந்துகொண்டதில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

எனது தெரு சரியில்லை
மத்தியில் ஆட்சி நடக்கும் திமிரில் பாஜகவினர் வரம்புமீறி நடந்து வருவதாகவும் நியாயமாக பார்த்தால் அதிமுகவை கண்டித்து தான் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும் என கூறினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக காரர்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் எந்த வேலையுமே செய்யவில்லை எனவும் தெரிவித்தார். இன்னும் சொல்லப்போனால் அது சரியில்லை இது சரியில்லை என்பதை விட தனது சொந்த தெருவே சரியில்லாமல் தான் இருப்பதாக வேதனைத் தெரிவித்தார்.

பாஜகவுக்கு திமிர்
மேலும், அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் வேலையே செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். தனது தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணி எடுத்த அதிமுக காரரை இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சரான துரைமுருகன் தனது தெரு மோசமாக இருப்பதாக கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சில மாதங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து சில மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நிகழ்வதாக கூறி திமுக மேயரை பாஜகவினர் முற்றுகையிட்ட நிகழ்வு வேலூர் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் துரைமுருகனை கடுமையாக கோபம் கொள்ளச் செய்திருப்பதால், அதிமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் தூசு தட்டி எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications