தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை... காரணம் அதிமுக அரசு தான்... பிரேமலதா பிரச்சாரம்
Recommended Video
வேலூர்: மக்களவை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுக, வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்ற முடியுமா என திமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆம்பூர், வாணியம்பாடி, வேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் ஆம்பூர் தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க செய்வார். காவிரி பாலாறு நதிநீரை இணைப்பார். தொகுதிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார் என்றார்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லை என்ற நிலையை அதிமுக அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரேமலதா, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்வதை தடுத்தவர் தான் துரைமுருகன் எனவும் விமர்சித்தார்.
வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட காரணமாக இருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஒரு அவமான சின்னம் எனவும் அவர் விமர்சித்தார். வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் வாணியம்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும் பிரேமலதா உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் நடித்தாலும், மக்கள் முன்னிலையில் நடிக்க தெரியாதவர்கள் விஜயகாந்தும், ஜெயலலிதாவும் என்றார். பா.ஜ.க.வை பிடிக்காது என்று கூறிவிட்டு, பா.ஜ.க. மத்திய அமைச்சர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு காரியம் சாதித்துக் கொள்ள துடித்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்களை போய் சந்திப்பவர்கள் தி.மு.க.வினர் தான். அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டுமானால், ஏ.சி. சண்முகத்துக்கு வாக்களியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.