திடீரென காலை தொட்டு வணங்கிய பாஜக பெண் நிர்வாகி! உடனே பிரதமர் மோடி செய்த செயல்.. அதிர்ந்துபோன மேடை
வேலூர்: வேலூரில் இன்று நடந்த பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் மேடையில் திடீரென்று பெண் நிர்வாகி பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார். இதையடுத்து பதிலுக்கு பிரதமர் மோடி செய்த செயலால் மேடையே அதிர்ந்துபோனது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக தனியே கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு வாகன பேரணி சென்றார். அதன்பிறகு இன்று பிரதமர் மோடி வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்துக்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வேலூர் சென்றார். சென்னை வாகன பேரணியை போலவே தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி வேலூரில் இறங்கினார். வேலூர் கோட்டை மைதானத்தின் மேடையில் இருந்த நிர்வாகிகளை பிரதமர் மோடி வணங்கியபடி நடந்து சென்றார். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் திடீரென்று கீழே குனிந்து பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி உடனடியாக அந்த பெண் நிர்வாகிகளை நோக்கி கைககளை கும்பிட்டப்படி தலைக்குனிந்து 2 முறை வணங்கினார். பிரதமர் மோடியின் இந்த செயலால் நிர்வாகிகள் வியந்துபோயினர். மேலும் பெண் நிர்வாகியை நோக்கி பதிலுக்கு பிரதமர் மோடி தலைக்குனிந்து வணங்கியபோது அங்கிருந்த நிர்வாகிகள் ‛‛மோடி.. மோடி..'' என கோஷமிட்டு மேடையை அதிர வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு மற்றும் செங்கோலை நிர்வாகிகள் வழங்கினர். தற்போது வேலூர் பொதுக்கூட்டம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மதியம் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் நீலகிரி பாஜக வேட்பாளரான மத்திய இணையமைச்சர் எல் முருகன், கோவை வேட்பாளரான பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications