பெண்களை அவமானப்படுத்தும் திமுக.. வேலூரில் ஜெயலலிதாவின் பெயரை கூறி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
வேலூர்: பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்து வேலை செய்கின்றன. தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர் என வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசினார். மேலும் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த சம்பவத்தை கூறி அவர் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
லோக்சபா தேர்தலையொட்டி பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார். நேற்று சென்னையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.

அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று வேலூர் வந்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாஜகவினர் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி வந்திருந்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் வேலூர் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி வேட்பாளர் கணேஷ் குமார், கிருஷ்ணகிரி வேட்பாளர் கேஎஸ் நரசிம்மன் உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வேளையில் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு அவர் திமுகவை கடுமைாக சாடினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
கச்சத்தீவை இலங்கைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தது. தமிழக மீனவர்கள் இப்போது இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது காங்கிரஸ், திமுக கண்ணீர் வடிக்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இலங்கையில் இருந்து நான் மீட்டு கொண்டு வந்தேன். மீனவர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் துரோகம் செய்கிறது. கச்சத்தீவை யாருக்காக அவர்கள் இலங்கைக்கு கொடுத்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் காங்கிரசும், திமுகவும் அதுபற்றி பேசுவது இல்லை.
வேலூர் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது. நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன். இந்தியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர். இந்து மதத்தில் உள்ள பெண் சக்தியை அழிப்பேன் என்று ராகுல் காந்தி கூறினார். திமுகவுக்கும் அதே மனநிலை தான். சனாதனத்தை அழிப்பேன். ராமர் கோவில் விழாவை புறக்கணிப்பேன் என்று திமுகவினர் கூறினர்.
பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்து வேலை செய்கிறது. மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவை எப்படியெல்லாம் இவர்கள் மோசமாக பேசினர் என்பது நமக்கு தெரியும். தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்’’ என காட்டமாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications