பிடிபட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி... தம்பி அண்ணாமலைதான் பதில் சொல்லணும்: சீமான்
வேலூர்: சென்னை தாம்பரம் ரயிலில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக சொல்லப்படும் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பணம் பிடிபடுவது தொடரும். நீங்க ஒரு இடத்தில் பிடிச்சுருக்கீங்க.. மற்ற இடங்களில் எல்லாம் காசு கொடுக்கப்படவில்லையா? எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு தாம்பரத்தில் மட்டும் வெளியே வந்துள்ளது.

ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும்தான் காசு கொடுப்பார்கள். தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆகையால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டு பதில் சொல்ல வேண்டும்.
நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற ஜனநாயகம் இப்போது எவ்வளவு கொடுமையான பணநாயகமாக மாறிவிட்டது. இதை ஒழித்து தூய ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். நாங்கள் காசு கொடுப்பவர்கள் இல்லை. அதனால் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறோம். பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டு தடை என ஒரு முறை அறிவித்துதான் பாருங்களேன்.. எல்லாமும் சரியாகிவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். தாம்பரத்தில் நெல்லை செல்லும் ரயிலில் பயணித்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரித்த போது ரூ4 கோடி சிக்கியது. இந்த 3 பேரும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள். நயினார் நாகேந்திரனுக்காக ரூ4 கோடியை கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வருமான வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர். நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் ரூ4 கோடி சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications