“விஜய் முன்வைப்பது கொள்கை அரசியல் அல்ல.. வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறார்!” - திருமாவளவன் அட்டாக்
சென்னை: தமழிக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது எழும் தொடர் விமர்சனங்கள் குறித்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது, "விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த அச்சமும் இல்லை. முதல் முதலில் விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை வாழ்த்தி வரவேற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். அவர் கட்சி தொடங்கி 2.5 ஆண்டுகள் ஆக்கிவிட்டன. பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் நடத்தி இருக்கிறார். ஆனால், இதுவரை அரசியலாக, அதாவது கொள்கை சார்ந்த அரசியலாக எதுவும் பேசாமல் வெறுப்பு அரசியலை மட்டுமே பேசி வருகிறார்.

உடனடியாக ஆட்சிக்கு வந்து விட வேண்டும், நாளைக்கே ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்கிற ரீதியில் அவரது அரசியல் இருக்கிறது. கட்சியை விமர்சிப்பது என்பதை தாண்டி, அதற்கு எதிரான வெறுப்பை உமிழ்ந்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் ஜனநாயக சக்திகள் பலரும் அவருக்கு அறிவுரை சொல்லக்கூடிய வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரையில் தனிநபர் விமர்சனம் எதையும் செய்ததில்லை. எந்த கட்சியையும் நாங்கள் கடுமையாக விமர்சித்தது கிடையாது. ஆனால், அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனம் உண்டு. அந்த வகையில் விஜய் முன் வைக்க கூடிய அரசியல், கொள்கை சார்ந்த அரசியலாக அல்லாமல், ஆளுங்கட்சிக்கு எதிரான வெறுப்பை முன்வைக்கக்கூடிய அரசியலாக இருக்கிறது என்றுதான் நாங்கள் குற்றம் சாட்டியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல வேலூரில் உள்ள தனி தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்படுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு முறையும் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் கே.வி குப்பம் இரண்டையும் எங்களுடைய கோரிக்கை பட்டியலில் நாங்கள் எழுதி கொடுத்திருக்கிறோம். இருப்பினும் பேச்சுவார்த்தையில்தான் இந்த தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படுமா என்பது இறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தொகுதிகளை அடையாளம் கண்டு, அவை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இருப்பினும் வெற்றி வாய்ப்பு, தொகுதிகளுக்கான எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுகிறது என்பது இறுதி செய்யப்படும். இந்த முறை எங்களது பட்டியலில் குடியாத்தம் மற்றும் கே.வி குப்பம் தொகுதிகள் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு பெயர் மாற்றம் செய்தது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், "ஆளுநர் மாளிகைக்கு இதுவரையில் ராஜ் பவன் என்று இருந்த பெயரை, இப்போது லோக் பவன் என பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications