கே.சி.வீரமணி வீட்டில் நடந்த ரெய்டுக்கு என்ன காரணம்..? கொதிக்கும் ர.ர.க்கள்.. மறுக்கும் உ.பி.க்கள்..!
வேலூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கே.சி.வீரமணியை முடக்கும் நோக்கில் ரெய்டு நடவடிக்கை நடத்தப்பட்டதாக வேலூர் மாவட்ட அதிமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் அடங்கும்.
இங்கு அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவும், வைட்டமின் 'ப'வை இறக்கக்கூடிய கே.சி.வீரமணியை ஆஃப் செய்யவும் இந்த சோதனை நடைபெற்றிருக்குமோ என விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர்
கடந்த 2013-ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற அவர் அடுத்தடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, வணிகவரித்துறை, சிறிது காலம் சுகாதாரத்துறை என பல இலாகாக்களுக்கு அமைச்சராக இருந்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

சோதனை
சோதனை தொடங்கப்பட்டபோது கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் எதுவும் சிக்காது என கருதிய அதிமுகவினருக்கு, சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட உடைமைகள் பெரும் வியப்பை கொடுத்தது. 5 கிலோ தங்கம், 9 சொகுசு கார்கள், உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைபற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து சேர்த்துள்ளதாக கே.சி.வீரமணி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

3 மாவட்டங்கள்
இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் அதிமுகவின் வெற்றிக்கு பொறுப்பேற்று செயலாற்றி வந்த கே.சி.வீரமணியை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அசைத்து பார்த்துள்ளது. பழைய வேகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அவர் கவனிப்பாரா என்பதும் இப்போது கேள்விகுறியாகியுள்ளது.

அமைதியானவர்
கடந்த அதிமுக அமைச்சரவையில் எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் தானுன்னு தன் பணியுண்டு என்று இருந்த அமைச்சர்களில் கே.சி.வீரமணியும் ஒருவர். கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, சி.வி.சண்முகம் போன்றோர் கூட ஸ்டாலினை கடுமையாக கடந்த காலங்களில் விமர்சித்துள்ளனர். ஆனால் வீரமணியை பொறுத்தவரை இருக்கும் இடமே தெரியாமல் கடந்த 5 ஆண்டுக்காலம் இருந்தவர்.

புகார் அடிப்படையில்
கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையின் பின்னணியில் திமுகவின் உச்ச பதவியில் இருக்கும் உள்ளூர்காரரின் கைங்கர்யம் இருக்குமோ என்றும் வேலூர் மாவட்ட அதிமுகவினர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இதனிடையே இதனை மறுத்துள்ள திமுகவினர், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்திருக்கக்கூடும் என்று காரணம் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications