நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்.. வேலூர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஆவேசமான ஸ்டாலின்
வேலூர்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேலூர் பிரச்சார கூட்டத்தில் சவால் விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
வேலூர் லோக்சபா தொகுதிக்கு வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் தீவிர இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேலூரில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனதை ஆதரித்து, இன்று மாலை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நன்றி தெரிவிப்பு
இதை இறுதி கட்ட பிரச்சாரம் என்று சொல்வதைவிட, வெற்றி பெற்றதற்காக நடைபெறும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் என்று கூடச் சொல்லிவிடலாம். வெற்றி என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், எவ்வளவு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என்ற கேள்வியோடு மட்டும் தான் இந்த தேர்தல் களத்தில் நின்று கொண்டு இருக்கிறோம்.

சதி செய்தனர்
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால், வருமான வரித்துறையை கையில் போட்டுக்கொண்டு, வேண்டுமென்றே வருமான வரி சோதனையை நடத்தினர். சதி செய்து தேர்தலை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் வரும் 5ம் தேதி பெறப்போகும் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

ஓபிஎஸ் பேச்சு
அப்துல் கலாமை கசாப்பு கடைக்காரர் என்று சொல்லி ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது கருணாநிதி, என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். இஸ்லாமிய மக்கள் திமுக பக்கம் ஆதரவாக நிற்கிறார்கள், எனவே அதில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியுள்ளார்.

பிரதீபா பாட்டீல் ஏன்
இரண்டாவது முறையாக அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக போட்டியிட சொன்னபோது, ஒரு மனதாக தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். ஆனால் அப்படியான ஒரு நிலைமை வரவில்லை என்பதால், அப்துல் கலாம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். எனவே, பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக கருணாநிதி ஆதரவளித்தார்.

இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள்
உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது, கருணாநிதியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அப்துல் கலாமை கொச்சைப்படுத்திய உங்களை நாடு மன்னிக்குமா? இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் உங்களை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். கருணாநிதி அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி இருக்கிறார் என்று நிரூபித்து விட்டால், அடுத்த நிமிடமே நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன். உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால், நான் கொடுக்கும் தண்டனையே நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications