நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு தந்த கார்த்தி, பொன்வண்ணன்- வீடியோ
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம் வரும் 27-ம் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு எதிர்த்தரப்பினரால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிய பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நேரில் சென்று அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொன்வண்ணன், "இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா போன்றவை குறித்து சிறப்பான முடிவுகள் எடுக்க உள்ளோம். ஏற்கனவே லயோலா கல்லூரியில் பொதுக்குழு கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இருந்தாலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் உரிய பாதுகாப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்" என்றார்.