திமுக கொடி நட்ட சிறுவன்.. மின்சாரம் தாக்கி பரிதாப பலி.. விழுப்புரம் திருமண விழாவில் அதிர்ச்சி!
விழுப்புரம்: விழுப்புரம் திருமண விழா ஒன்றில் திமுக கொடி நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் நேற்று முதல்நாள் பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் இவரின் வீட்டு திருமண விழாவிற்கு திமுக பிரமுகர்கள் சிலர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அதோடு தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இந்த திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து திமுகவினர் சார்பாக இவரை வரவேற்க பல்வேறு இடங்களில் கொடிகள் நடப்பட்டு இருந்தது.

வரவேற்பு
திமுக நிர்வாகிகளுக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் கொடி கம்பங்கள் நடப்பட்டது. இந்த பணிகளில் 13 வயதே ஆன தினேஷ் என்ற அதே பகுதியை சேர்ந்த சிறுவனும் ஈடுபட்டு வந்தான். திருமண விழாவிற்கான அலங்கார பணிகளில் காலையில் இருந்து ஈடுப்பட்டு வந்தார். விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியில் படிக்கும் தினேஷ், ஏகாம்பரம் என்பவரின் மகன் ஆவார்.

ஷாக்
இந்த நிலையில்தான் சாலை ஓரத்தில் கொடியை நடும் போது மேலே சென்ற மின்சார வயரில் கொடி கம்பம் சிக்கி தினேஷ் உடலில் ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். இந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் சென்று இருக்கின்றன. தினேஷ் கொடி நட்ட போது அந்த கம்பம் மின்சார வயரில் உரசி தினேஷ் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

காயம்
இதில் தூக்கியடிக்கப்பட்ட தினேஷ் கடும் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுய நினைவை இழந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலியானார். உடலில் தலை உட்பட சில இடங்களில் மோசமான காயம் ஏற்பட்டதாலும், மின்சாரம் தாக்கியதாலும் இவர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுபஸ்ரீ
கடந்த 2019ல் சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். அப்போதே பேனர் மற்றும் கொடி வைக்கும் கலாச்சாரம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் திருமண விழாவில் திமுக கொடி நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications