விக்கிரவாண்டியில் பாமகவுக்கு ஓட்டு போடக்கூடாது.. சிவி சண்முகம் பெயரில் பரவிய பதிவு! அதிர்ந்த அதிமுக!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்கக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம். இடைத்தேர்தல் போட்டியில் அதிமுக இல்லாததால், அதிமுக தொண்டர்களின் வாக்குகளை கைப்பற்ற கட்சிகள் போட்டி போடுகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாமகவும் நாதகவும் அதிமுகவின் ஆதரவை வெளிப்படையாகவே கேட்டு வருகின்றன. எனினும் இதுவரை அதிமுக எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.
விக்கிரவாண்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார். மேலும், பாமகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஜெயலலிதா படத்தையும் போட்டிருந்தனர்.
பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்துவது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாமக பயன்படுத்துவது எங்களுக்கு பெருமைதான். அதிமுக தலைவர்களை பயன்படுத்தினால் தான் வாக்குகள் விழும் என்ற நிலை இருப்பது எங்களுக்கு பெருமை தானே" என்று கூறினார்.
பாமகவினர் தேர்தல் பிரச்சார பேனர்களில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வாக்குச் சேகரித்து வரும் நிலையில், "புரட்சித்தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பாமகவுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த பாமகவுக்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்" என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த பதிவு வேகமாகப் பரவி வரும் நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம், நேற்று இரவு திண்டிவனம் ரோஷணை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், "சமூக வலைதளத்தில் சி.வி.சண்முகம் குறித்து அவதுாறாக கருத்துப் பரப்பி வருகின்றனர். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் தற்போது டெல்லியில் உள்ளதால், அவர் அறிவுறுத்தியதன் பேரில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாக அவரது உதவியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவை மையமாக வைத்து நடக்கும் இந்த அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications