என்ன தைரியம் உனக்கு..விசிகவினர் மீது திமுக பிரமுகர் மகன் கொடூர தாக்குதல்! பரபரப்பு வீடியோ காட்சிகள்!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏரி மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டிய விசிகவினர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர் தாக்குதல் நடத்தியதாக சமூக வளைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முன்வர்பாஷா என்பவர் உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்வர் பாஷா ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக செஞ்சி பகுதி முழுவதும் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.
மணல் கொள்ளை
இது குறித்து சுவரொட்டியில் இருந்த தொலைபேசி எண்ணை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது மணல் கொள்ளை தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் பேட்டி கொடுப்பதாக கூறியுள்ளனர். அடுத்து மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
திமுக பிரமுகர்
அப்போது மணல் கொள்ளை குறித்து பேசுகிறோம் என அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த லியாகத் அலி மற்றும் அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கொடூரமாக தாக்கினர். அவர்கள் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதோடு காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர்.
கொடூர தாக்குதல்
மேலும் விடாமல் தொடர்ந்து அவர்களை துரத்தி துரத்தி அடித்ததோடு முட்புதர்களுக்குள் தள்ளி மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை அடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் லியாகத் அலி மற்றும் அவரது உடன் வந்தவர்கள் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
உண்மை என்ன?
இதனிடயே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கும் லியாகத் அலிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே அவர்கள் மணல் கொள்ளை என போஸ்டர் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. மோதல் சம்பவம் தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் உலாவி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூவர் லேசான காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏரி பகுதியில் நிலத்திற்கு வழி கேட்டு நடந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மேலும் மோதல் ஏற்படாமலிருக்க அப்பகுதிகள் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.