உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்விக்கு கிடைத்த தண்டனைதான், திமுகவின் தோல்வி என்றும், இதற்காக காங்கிரஸ் போன்ற தோழமை கட்சிகள் மீது குறை செல்ல வேண்டாம் என்றும் முரசொலியின் விமர்சனத்திற்கு, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், திமுக கூட்டணியிலிருந்து தவெகவுக்கு தாவியது காங்கிரஸ். இதனால் திமுக கடும் விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இப்படி இருக்கையில்தான், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, ராகுல் காந்தியை விமர்சித்து எழுதியிருந்தது.

முரசொலி விமர்சனம்
"தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது. தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது." என்று முரசொலியில் எழுதப்பட்டிருந்தது.
மாணிக்கம் தாகூர் பதிலடி
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் தனது x பக்கத்தில், "முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது. 2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா? மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது.
கலைஞர் தலைமை
தி.மு.க. பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞர் இருந்தார். தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை.
கமிஷன் மாடல்
மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.
தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். "திராவிட மாடல்" என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, "கமிஷன் மாடல்" அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது.
உதயநிதியின் தோல்வி
அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான அரசியல் தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர். இன்று தமிழக அரசியலில் மக்கள் கேட்கும் கேள்வி வேறு. மே4 தேதி மாலை பாஜகவை எதிர்ப்பதாக பேசிக்கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன?
ராகுல் காந்தி
மக்கள் அளித்த தீர்ப்பை தடுக்கவும், அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன? இப்போது அன்பு தலைவர் ராகுல் காந்தி பற்றி பேசுகிறார்கள். தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல. பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர் அவர்.
இரட்டை வேடம்
என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும். தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும். மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள். ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை.












Click it and Unblock the Notifications