"நான் இங்கேயே இருக்கேன்! போய் அமைச்சர் பொன்முடியை வரச் சொல்லு".. பிரச்சாரத்தில் சிவி சண்முகம் ஆவேசம்
விழுப்புரம்: திமுகவினர் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாத காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கட்டப்பஞ்சாயத்து அராஜகத்தில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டினார்.
Recommended Video
விழுப்புரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க., ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரம்
இந்த 8 மாத தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தார்கள்? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அந்த வாக்குறுதியை நிறைவேற்ற திட்டங்கள் வகுத்திருக்கிறார்களா? என்று மக்கள் சிந்தித்து பாருங்கள். கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.

நீட் தேர்வு
மேலும் நீட் தேர்வு விஷயத்தில் இந்த மாநில மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி திமுக நாடகம் நடத்தி வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாத காலத்தில் அக்கிரமங்கள் மற்றும் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது சென்னை, கோவை ஆகிய இடங்களில் வீடு கட்டவோ வாங்கவோ முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார்.

சிவி சண்முகம்
அப்போது கூட்டத்தில் ஒருவர் சிவி சண்முகத்தை பார்த்து குரல் கொடுத்ததால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அப்போது உடனே அங்கிருந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து இழுத்து சென்று விட்டனர். பின்னர் பேசிய சிவி சண்முகம், இந்த மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நாங்கள் இல்லை.

பொன்முடியை வர சொல்
போய் அமைச்சர் பொன்முடியை வரச் சொல்லுங்கள். ஏன் முடிந்தால் முதல்வர் ஸ்டாலினும் வரட்டும். நான் இரவு 12 மணியானாலும் இங்கேயே இருக்கிறேன் என ஆவேசம் காட்டினார். மேலும் பேசிய அவர் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. திமுக மீதும் காவல் துறையினர் மீதும் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.












Click it and Unblock the Notifications