பேக்கரி பிஸ்கட் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி,மயக்கம்.. விழுப்புரத்தில் பரபரப்பு..என்ன நடந்தது?
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தெருவில் விற்கப்பட்ட பிரட் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருட்களை சாப்பிட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 322 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 298 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 4 வது கட்டமாக வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரையில் கிராமப் பகுதிகள் அதிகளவில் உள்ளன. கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஜவுளி, பாத்திரங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என்றால் பல கி.மீ பயணம் செய்து விழுப்புரம் நகரப் பகுதிக்கு வர வேண்டும்.
இதனால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை இருசக்கர வாகனம், ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் வைத்து கிராமங்களில் விற்பனை செய்யும் நடைமுறை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் அருகே தெருவில் விற்கப்பட்ட பேக்கரி உணவு பொருட்களை சாப்பிட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பொய்கை அரசூர் கிராமத்தில், பிரட் மற்றும் பேக்கரி பொருட்கள் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாங்கி சாப்பிட்ட அப்பகுதியை சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தைகளை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இச்சம்பவத்தால் பொய்கை அரசூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications