அமைச்சரை வழிமறித்து ஆவேசம் காட்டிய திமுக நிர்வாகி! ஊரெங்கும் உட்கட்சி பூசல்! என்ன தான் நடக்குது?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை வழிமறித்த திமுக நிர்வாகி ஒருவர் தன் மீதும் தனது மகன் மீதும் ஏன் எஃப்.ஐ.ஆர். போடச் சொன்னீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
விழுப்புரம் மாவட்ட திமுக பிரதிநிதியாக இருப்பவர் வீடுர் ஜெயராமன். இவருக்கும் வீடுர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரான பிரகாஷுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இந்நிலையில் திமுக மாவட்ட பிரதிநிதி வீடுர் ஜெயராமன் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஆவேசமான ஜெயராமன் தன் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யச் சொல்லி காவல்துறையினரை தூண்டினீர்கள் எனக் கேட்டு பிரகாஷிடம் மல்லுக்கட்டியிருக்கிறார்.

பிரகாஷோ அமைச்சர் செஞ்சி மஸ்தானை நோக்கி கையை காட்டி அவர் தான் வழக்குப் பதியச் சொன்னார் என தன்னிடம் வந்த பந்தை அமைச்சர் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார். இதனால் வெகுண்டெழுந்த திமுக மாவட்ட பிரதிநிதி வீடுர் ஜெயராமன், மைலத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை வழி மறித்து நிறுத்தி ஏன் தங்கள் மீது எப்.ஐ.ஆர். போடச் சொன்னீர்கள், நாங்க என்ன செஞ்சோம் என ஆவேசமாக கத்தினார்.
அதுமட்டுமல்ல தனது தலையில் அடித்துக் கொண்டும் ஆற்றாமயை வெளிப்படுத்தினார் ஜெயராமன். ஆனால் அமைச்சரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளேச் செல்லுமாறு கூறிய அவரது ஆதரவாளர்கள் ஜெயராமனை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தீபாவளிக்குள் தனக்கு ஒரு முடிவு தெரியாவிட்டால் வேறு முடிவு எடுப்பேன் எனக் கூறி ஜெயராமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே பாஜக வலை விரித்து வரும் நிலையில் அவர்களை வாலண்டியராக வரவேற்கும் வகையில் திமுகவில் சில நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளது.
அமைச்சர் என்றால் ஐயா என்று சொல்லிக்கொண்டு பம்மியபடி நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்பதற்கு உதாரணம் தான் மைலத்தில் நடைபெற்றிருக்கின்ற இத்தகைய நிகழ்வு. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் சொந்தக் கட்சியின் அமைச்சரையே நிற்க வைத்து திமுககாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications