சிவி சண்முகத்தை மீண்டும் வீழ்த்த தயாராகும் திமுக.. மயிலம் தொகுதிகளில் பரபரக்கும் தேர்தல் பணிகள்!
விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை மயிலம் தொகுதியில் வீழ்த்த திமுக தலைமை தயாராகி வருகிறது. விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது ரிஸ்க் என்று சிவி சண்முகம் தொகுதி மாறும் சூழலில், அங்கு திமுகவினர் இப்போதே பம்பரமாய் சுழன்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி இறுதி செய்த கையோடு, தொகுதி பங்கீட்டை முடிக்கவும் இரு கட்சிகளும் ஆலோசித்திருக்கின்றன. இதனிடையே மயிலம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோத தயாராகி வருகின்றன.

ஏற்கனவே அதிமுக ராஜ்ய சபா எம்பி சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் இருந்து மாறி மயிலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை சிவி சண்முகம் தனது அண்ணன் ராதாகிருஷ்ணன் மூலமாக வழங்கினார். இதனை அறிந்த மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான அன்புமணி ஆதரவு சிவக்குமார், விக்கிரவாண்டி தொகுதிக்கு மாற முடிவு எடுத்துவிட்டார்.
மயிலம் தொகுதியில் போட்டியிடுவது என்று சிவி சண்முகம் சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்து தேர்தல் பணிகளை தனது ஆதரவாளர்கள் மூலமாக மேற்கொண்டு வந்தார். தனது அண்ணன் ராதாகிருஷ்ணன் மூலமாக அடுத்தக் கட்ட பணிகளையும் சிவி சண்முகம் முடுக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில் சிவி சண்முகத்தை மீண்டும் தோற்கடிக்க முடிவு செய்து திமுகவினரும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மயிலம் தொகுதி இன்னும் எந்தக் கட்சிக்கு என்றே முடிவாகாத நிலையில், நமது சின்னம் எங்கள் சின்னம் உதயசூரியன் என்று சுவர் விளம்பரங்களை திமுகவினர் வரைய தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சிவி சண்முகத்திற்கு எதிராக போட்டியிடுவதற்கான வேட்பாளர்களையும் திமுக கொம்புவீசி விட்டிருக்கிறது.
ஏற்கனவே திமுகவில் இணைந்த மதிமுக முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி போட்டியிட தயாராக துண்டு போட்டு பணிகளை செய்து வருகிறார். அதேபோல் ஜெகத்ரட்சகன் ஆதரவாளரான செஞ்சி சிவா, விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சேகர் ஆகியோர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப மயிலம் தொகுதி திமுக நிர்வாகிகளும் பணிகளில் ஆர்வமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளனர்.
சிவி சண்முகத்தின் சொந்த ஊரான ஒளவையார் குப்பம் மயிலம் தொகுதியில் தான் வருகிறது. கடந்த தேர்தலில் திமுக நிர்வாகி லட்சுமணனிடம் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவி சண்முகம் தோல்வி அடைந்தார். இதனால் உற்சாகம் அடைந்த திமுக, லட்சுமணனுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்தது. அதன்பின் லட்சுமணன் தொகுதியில் பம்பரமாக சுழன்று வருகிறார். இதனால் சிவி சண்முகம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், தொகுதி மாறுவது உறுதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications