ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பேருந்து நடத்துனர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பேருந்து நடத்துனரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் அடுத்தடுத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சர்ச்சைகளில் சிக்குவதும், அவர்களை பணியிடை நீக்கம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் யாரும் யாரிடமும் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்துகளில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பயணிகளிடம் தவறான மற்றும் மரியாதைக்குறைவாக நடந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற மீனவ மூதாட்டி, அவர் வைத்திருந்த மீன் கூடை நாறுவதாகக் கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துனரால் இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசு பேருந்தின் நடத்துனர், ஓட்டுனர், நேர கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குறவர் மக்களுக்கு நேர்ந்த அவமரியாதை
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து குறவர் மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. மேலும் சிறு குழந்தை ஒன்று பேருந்தின் அருகே அழுது கதறியது அனைவரது நெஞ்சத்தையும் ஒரு கணம் உறைய வைத்தது. இந்த சம்பவத்திலும் அரசு பேருந்தின் ஓட்டுனர். நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரத்தில் அடுத்த அதிர்ச்சி
இந்த நிலையில் விழுப்புரத்தில் அரசு பேருந்தில் மற்றொரு கொடூர நிகழ்வும் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு விழுப்புரத்திலிருந்து கோனூர் என்ற ஊருக்கு தடம் எண் 27 என்ற எண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. விழுப்புரத்தில் இருந்து ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்தில் நடத்துனராக சிலம்பரசன் என்பவரும், ஓட்டுனராக அன்புச்செல்வன் என்பவரும் பணியில் இருந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் இறங்கி விட்டனர்.

கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை
பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், பேருந்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக தன்னந்தனியாக பயணித்துள்ளார். பேருந்து ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த நடத்துனர் சிலம்பரசன் அந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனை பேருந்தில் ஓட்டுனராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அரசுப்பேருந்து நடத்துனர் கைது
இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, காணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காணை காவல்நிலைய போலீசார் அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் நடத்துனரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த அரசு பேருந்து ஓட்டுனர் அன்புச்செல்வனை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லாததால் தனியாக அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications