லாக்டவுன் மீறல்- கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த், முருகன் மீது போலீசார் அதிரடி வழக்கு
விழுப்புரம்: லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயஶ்ரீ என்ற பத்தாம் வகுப்பு மாணவி தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். குடும்ப முன்பகை காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிவாரண உதவி
கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலிய பெருமாள் இருவரும் தற்போது அதிமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளனர். தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது விழுப்புரம் ஜெயஶ்ரீ படுகொலை சம்பவம். ஜெயஶ்ரீ குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ5 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

நேரில் ஆறுதல்- நிதி உதவி
இதனிடையே தமிழக பாஜக தலைவர் முருகன், சிறுமதுரை கிராமத்துக்கு சென்றார். அங்கு ஜெயஶ்ரீ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தமிழக பாஜக சார்பில் ரூ1 லட்சம் நிவாரண உதவியையும் முருகன் வழங்கினார். தமது கட்சியினருடன் பெரும் கூட்டமாக சிறுமதுரை கிராமத்துக்கு முருகன் சென்றிருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
இதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் சிறுமதுரை கிராமத்துக்கு சென்று ஜெயஶ்ரீ குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அந்த குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ரூ1 லட்சம் உதவித் தொகையை பிரேமலதா வழங்கினார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஜெயஶ்ரீயை எரித்து கொன்றவர்களை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றார்.

கூட்டணி தலைவர்கள் மீது வழக்கு
இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாட்டுகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முருகன் மீது திருவெண்ணய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி கூட்டமாக இருவரும் சென்றதால் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இவருமே அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள். ஆனாலும் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications