திருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது.. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலைவரப்படி 350 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி தேனியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
விழுப்புரம் தனித்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிட்டார்.
இதில் இறுதி சுற்றுக்கு முன்பான நிலவரப்படி விசிக வேட்பாளர் ரவிக்குமார் 5 லட்சத்து 46 ஆயிரத்து 114 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார் இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 4 லட்சத்து 22 ஆயிரத்து 114 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருந்தார்.
இதேபோல் அமமுக வேட்பாளர் கணபதி 57 ஆயிரத்து 456 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பிரகலதா 24 ஆயிரத்து 329 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 17 ஆயிரத்து 463 வாக்குகளுடன் 5 வது இடத்தையும் பிடித்து இருந்தது.
இறுதி சுற்று நிலவரப்படி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் ரவிக்குமாரை விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் ராஜதந்திரம் பலித்துள்ளது.












Click it and Unblock the Notifications