“காசு யாருக்கு வேணும்?” அமைச்சர் பொன்முடி வழங்கிய காசோலையை வாங்க மறுத்து கதறிய சிறுமியின் தாய்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் அறிவித்த நிவாரணத்திற்கான காசோலையை சிறுமியின் தாயாரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கிய நிலையில், அதனை வாங்க மறுத்து தாய் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் ஒரு தனியார் பள்ளியில், பழனிவேல் - சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்றரை வயது குழந்தை எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. மதிய உணவு இடைவேளையின்போது அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், அந்தச் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

கழிவுநீர் தொட்டி மீது சிறுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்ததால் சிறுமி லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தையை காணாமல் தேடிய ஆசிரியை, செப்டிக் டேங் இரும்புதகடு நொறுங்கி இருப்பதைக் கண்டு உள்ளே பார்த்ததில், குழந்தை கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மூன்றரை வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன்வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவனக்குறைவாக செயல்பட்டதற்காக பள்ளி ஆசிரியர், தாளாளர், ஆசிரியர் ஆகிய மூவர் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையின் உடல், பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து, குழந்தையின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பொன்முடி, குழந்தையின் தாயாரிடம் வழங்கினார். ஆனால், அதனை வாங்க மறுத்த சிறுமியின் தாய் "காசு யாருக்கு வேணும்? எங்க புள்ளைய கோடி ரூபா கொடுத்தாலும் வாங்க முடியாது" என கதறினார். இதையடுத்து, சிறுமியின் உறவினரிடம் காசோலையை வழங்கினார் அமைச்சர் பொன்முடி.
பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடமாட்டோம் என சிறுமியின் உறவினர்களிடம் உறுதி அளித்தார் அமைச்சர் பொன்முடி. சிறுமியின் தாயார், அந்த காசோலையை சிறுமி உடல் வைக்கப்பட்ட பெட்டி மீது வைத்து அழுதார். அப்போது உறவினர் பெண் ஒருவர் அந்த காசோலையை தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications