நிலைத்தடுமாறிய பொன்முடி.. சுதாரித்த உதவியாளர் சட்டென செய்த சம்பவம்.. அதிர்ச்சியான திமுகவினர்
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மேடையில் இருந்து இறங்கி காரை நோக்கி நடந்து சென்றபோது திடீரென்று கால்தவறி கீழே விழப்போன சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்த நிலையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தான்.
ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி, மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சின்னசெவலை எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வந்தது. இதனை பரிசீலனை செய்ய அரசு புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்ட அனுமதி வழங்கியது.
அதன்படி நேற்று அமைச்சர் பொன்முடி சின்னசெவலை கிராமத்துக்கு சென்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பூமிபூஜையில் பங்கேற்றனர். அதன்பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பொன்முடி பேசினார். பேச்சை முடித்துவிட்டு அவர் மேடையில் இருந்து இறங்கி காரை நோக்கி நடந்து சென்றார்.
இந்த சமயத்தில் அவர் தனது வேஷ்டியை சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் இடறியது. இதனால் அவர் கால்தவறி தரையில் விழப்போனார். ஆனால் அருகே நின்ற அவரது உதவியாளர் உடனடியாக சுதாரித்து பொன்முடியை தாங்கிப்பிடித்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பொன்முடி தரையில் விழவில்லை. அதன்பிறகும் பொன்முடி நிற்காமல் வேகமாக நடந்து சென்று காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications