பிரதமர் மோடி பரிசுத்தமானவர்.. துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாதவர்.. புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்
விழுப்புரம்: பிரதமர் மோடி மிகவும் பரிசுத்தமானவர் என்றும் அன்பிற்கு இலக்கணமானவர் என்றும் விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவரை பாராட்டிப் பேசினார்.
லோக்சபா தேர்தல் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
பாமக: தமிழ்நாட்டில் பாஜக இந்த முறை தனது தலைமையில் தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. அதில் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளது. இதில் பாமக இந்த முறை 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காக அக்கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
ராமதாஸ்: இதற்கிடையே விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் பேசுகையில், "இன்று உலகில் பல வல்லரசுகளில் பல நல்ல தலைவர்கள் உள்ளனர். அந்த பெரிய பெரிய நாட்டின் தலைவர்கள் எல்லாம் கூட ஒரு மனிதரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவர் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.. அவர் ஒரு அற்புதமான தலைவர். உலக தலைவர்களே கண்டு வியக்கும் மனதின்.
அவரை மூன்றாவது முறையாகப் பொதுமக்கள் பிரமராக ஆக்க வேண்டும். அவர் குண்டூசி அளவுக்கு அல்லது துரும்பு அளவுக்குக் கூட தவறு செய்யாதவர்.. பரிசுத்தமானவர்.. அன்புக்கு இலக்கணம் என்றாலே அது மோடி தான். எனவே, அப்படிப்பட்ட நபரை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்வு செய்ய வேண்டும்.
பாஜக இந்த முறை 400 எம்பிக்களை பெறும் எனச் சொல்கிறார்கள். விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் 401ஆவது நபராக இருப்பார். இவரும் சேர்ந்து தான் வாக்களித்து மோடியைத் தேர்வு செய்வார் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதி: விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து விசிகவின் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுகவில் இருந்து பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாஜக கூட்டணியில் பாமகவில் இருந்து முரளிசங்கர் போட்டியிடுகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் 5.59 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாமகவின் வடிவேல் ராவணன் 4.31 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications