அன்புமணியை நானே நீக்குவேனா?.. மீண்டும் இணையும் தந்தை, மகன் - ஹாப்பி மோடில் ராமதாஸ்
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்தது. ஆளுக்கொரு புறமாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், இப்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எனக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது கட்சி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பொது வெளியிலேயே அம்பலமாகியது. ராமதாஸின் மகளின் மகன் முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டதில் தொடங்கிய இந்த மோதல் தற்போது வரை தொடர்ந்து வந்தது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதுதான் முடிவு இனி பாமகாவின் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்று ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு அன்புமணி, பாமக நிர்வாகிகளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நான் தான் கட்சியின் தலைவர் என்று கூறினார். இதற்கிடையே, தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை ராமதாஸ் கடந்த 3 நாள்களாக கூட்டினார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்திருந்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
தந்தை மகனின் பிரச்சனையால் தொடர்ந்து கட்சிக்குள் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி விரைவில் ராமதாஸும், அன்புமணியும் சந்திக்கப்போவதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸும், தனக்கும், அன்புமணிக்கும் எந்தவித மனக் கசப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்புமணிக்கும் எனக்கும் எந்தவிதமான மனக் கசப்பும் இல்லை. இனிவரும் நாட்களில் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார். இனிப்பான செய்தியை மட்டுமே சொல்வேன். கசப்பான செய்திகளை நான் சொல்வதில்லை. கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கப்போவதாக வதந்திகளை கிளப்புகின்றனர்.
வதந்திகளை கிளப்புபவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?. சமூக நீதியை இந்திய அளவில் பேசுவது நான் ஒருவன் மட்டுமே. அதை நான் மட்டும்தான் பேச முடியும். மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை என்று நிரூபிக்கவே நீச்சல் அடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications