பாமக மகளிர் மாநாடு.. 6 லட்சம் அழைப்பிதழில் மிஸ்ஸான அன்புமணி பெயர்.. எம்எல்ஏ அருள் சொன்ன வார்த்தை!
விழுப்புரம்: பாமக சார்பாக நடக்கவுள்ள பூம்புகார் மகளிர் மாநாடு அழைப்பிதழ் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பூம்புகார் மாநாடு அழைப்பிதழில் அன்புமணியின் பெயர், புகைப்படம் இல்லாதது பிரிண்டிங்கில் நடந்த தவறு என்று அக்கட்சியின் எம்எல்ஏ அருள் விளக்கம் அளித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ராமதாஸ் தனது பெயரையே அன்புமணி பயன்படுத்த கூடாது என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாமக தலைவர் பதவியின் பதவிக்காலம் மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

ஆனாலும் அன்புமணி ஒரு பக்கம் பாமக நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ராமதாஸ் தரப்பில் செயற்குழு கூட்டம் தனியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் தனது மகள் காந்திமதியை அழைத்து வந்து மேடையில் அமர வைத்தார். இதனால் மகனின் இடத்தில் ராமதாஸ், மகளை முன்னிறுத்த உள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
அதற்கேற்ப ஆகஸ்ட் 10ஆம் தேதி பாமக சார்பாகப் பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழ் மற்றும் அடிக்கப்பட்டுள்ள 6 லட்சம் துண்டுப் பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் இடம்பெறவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ராமதாஸின் கடிதத்தில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது பாமகவின் மாநாடு அழைப்பிதழ் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் அன்புமணியின் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமகவின் இணை பொதுச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருள் பேசுகையில், அன்புமணியின் புகைப்படம், பெயர் இல்லாதது புறக்கணிப்பு அல்ல. பிரிண்டிங்கில் தவறு நடந்திருக்கிறது.
என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியவில்லை. விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ராமதாஸ் அறிவுறுத்தலின் பெயரில் 2 மாவட்டங்களுக்குப் பயணிக்க உள்ளேன். கூட்டணி விவகாரம் தொடர்பாக ராமதாஸ் முடிவு செய்வார். அன்புமணியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பூம்புகார் மாநாட்டிற்கு நிச்சயமாக அன்புமணி வருவார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் நாங்கள் அடித்துள்ள துண்டுப் பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அன்புமணியுடன் பேசும் விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications