திருக்கோவிலூரில் களமிறங்கும் வாரிசு.. விழுப்புரத்திற்கு மாறும் பொன்முடி! திமுக தலைமை முடிவு என்ன?
சென்னை: திருக்கோவிலூர் தொகுதியை தனது மகன் கெளதம் சிகாமணிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, மீண்டும் விழுப்புரம் தொகுதியில் களமிறங்க பொன்முடி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் இருந்து மாறவிருக்கும் சூழலில், மீண்டும் பொன்முடி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
1989, 1996, 2001, 2006 என்று விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் அமைச்சர் பொன்முடி. இந்த வெற்றியே திமுகவில் அவரை செல்வாக்கு மிக்கவராக மாற்றியது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் காரணமாக அமைந்தது. ஆனால் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் களமிறங்கினார்.

இந்த தேர்தலில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி தோல்வி அடைய, சிவி சண்முகம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனால் 2016 சட்டசபைத் தேர்தலில் சிவி சண்முகத்தை எதிர்த்து போட்டியிடாமல், திருக்கோவிலூர் தொகுதிக்கு ஓடினார் பொன்முடி. இதனால் சிவி சண்முகத்தை வீழ்த்த ஸ்டாலின் சரியான வேட்பாளரை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிமுகவில் இருந்து திமுக பக்கம் வந்த லட்சுமணனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் எதிர்பார்த்ததை போலவே விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தை வீழ்த்தி திமுக தலைமையை உற்சாகப்படுத்தினார். அதிமுகவில் இருந்தவர் என்பதால், சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் லட்சுமணன்.
இந்த நிலையில் சிவி சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இப்படியான சூழலில், அமைச்சார் பொன்முடி புதிய ரூட்டை எடுத்துள்ளார். கடந்த 2 தேர்தல்களாக திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட பொன்முடி, இம்முறை மீண்டும் விழுப்புரம் தொகுதியிலேயே போட்டியிட விரும்பி இருக்கிறார்.
அதேபோல் திருக்கோவிலூர் தொகுதியில் தனது மகன் கெளதம் சிகாமணியை நிற்க வைக்கவும் பொன்முடி காய் நகர்த்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கு திமுகவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஏற்கனவே நீதிமன்ற வழக்கு, இலவசங்கள் தொடர்பான பேச்சு, பட்டை நாமம் என்று பல்வேறு சர்ச்சைகளில் பொன்முடி சிக்கினார். இதனால் கட்சிப் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இருப்பினும் சில மாதங்களுக்கு முன் மீண்டும் கட்சிப் பதவி பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் கெளதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கெளதம் சிகாமணி போட்டியிடாத சூழலில், அவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. அப்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் சட்டசபைத் தேர்தலில் மகனை கட்டாயம் களமிறக்கிட வேண்டும் என்பதில் பொன்முடி தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் திமுகவினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், திமுக தலைமையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications