பள்ளிக்கு குடித்துவிட்டு வந்த மாணவர்கள்! தமிழகம் எங்கே போகிறது? ராஜேஸ்வரிபிரியா மதுவிலக்கு முழக்கம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் மதுபோதையில் வந்ததை பார்க்கும் போது, தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி பிரியா விடுத்துள்ள பதிவு வருமாறு;

''விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் அரசுபள்ளி மாணவர்கள் பள்ளிக்கு குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் , தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தினை ஏற்படுத்துகிறது.
மாணவ பருவத்தில் மதுவிற்கும் கஞ்சா போன்ற பிற போதைப் பொருள்களுக்கும் தமிழக மாணவர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. போதை இல்லா தமிழகத்தினை பற்றி பேசும் இடத்தில் கூட முதல்வர் அவர்கள் மதுபற்றி பேசுவது இல்லை.மதுவினை போதைப் பொருளாக தமிழக அரசு எண்ணுவதில்லை அப்படி நினைத்திருந்தால் அரசே மதுபானக் கடையை நடத்துமா?
பள்ளிகளுக்கு அருகாமையில் மதுக் கடைகள் இருப்பது இன்னும் கொடுமை. 21 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது மிகவும் மோசமான நிலை. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி மது இல்லா தமிழகத்தை உருவாக்க வழிகள் வகுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதே நிகழ்வை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் தனது வேதனையை பதிவு செய்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மாணவர்கள் தான் நாட்டின் வருங்கால மன்னர்கள் என்றும் அவர்களை நம்பித் தான் அவர்களின் குடும்பங்களும், சமுதாயமும், நாடும் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், மாணவர்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் மது அருந்தி விட்டு, தங்களுக்கு கல்வி வழங்கும் கோயிலான பள்ளிக்கூடத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications