பொய் கூட்டம்.. அரசியலில் என்னை ஒழித்துக்கட்ட முயற்சி நடக்கிறது.. அன்புமணியால் கொந்தளித்த ராமதாஸ்!
விழுப்புரம்: அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்படுவதாக கூறிய ராமதாஸ், அரசியல் அனுபவம் கொண்ட ஜிகே மணியை அந்தக் கூட்டம் வசைபாடுகிறது என்று அன்புமணியை மறைமுகமாக சாடியிருக்கிறார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் நீடித்து வருகிறது. இதனால் ராமதாஸ் தனி அணியாகவும், அன்புமணி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அன்புமணி தனி அணியாக சென்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஆனால் ராமதாஸ் தரப்பு இன்னும் எந்த கூட்டணியிலும் இணையவில்லை.

இதனிடையே பாமக இளைஞரணி கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், ஜிகே மணியை துரோகி என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர்.
என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜிகே மணியுஐ வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜிகே மணி.. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறர்கள். அந்தக் கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மக்கள் நலன் சார்ந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பால், அந்த நிலைப்பாட்டை திமுக மாற்றியது. அதேபோல் சென்னை முதல் அரியலூர் வரையிலான தலித் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய வேண்டும் என்று திமுக கணக்கிட்டுள்ளது. இது ராமதாஸ் உடனான கூட்டணியால் சிக்கல் உருவாகலாம்.
இதனால் ராமதாஸ் தரப்பை தனித்துப் போட்டியிட திமுக அறிவுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து ராமதாஸ் தரப்பு நேரடியாக களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் என்ன முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications