பாஜகனு சொல்லவே அசிங்கமா இருக்கு.. பல ஆடியோ இருக்கு! பெண்களுக்கு..மாவட்ட தலைவரை எதிர்த்து போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவரை எதிர்த்து மாவட்ட கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கட்சியில் தங்களுக்கு மரியாதை இல்லை என்றும், பாஜக என்று சொல்லவே அசிங்கமாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் விஏடி கலிவரதன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஐடி விங் பிரிவு தலைவருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி இருந்தது கட்சியினருக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஏடி கலிவரதனின் பேச்சை கண்டித்தும், அவர் மீது மாநில பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவாகவும் கூறி விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர், "இவர் வந்ததில் இருந்தே எல்லா நிர்வாகிகளும் மனக் கஷ்டத்தில் இருக்கிறார்கள். யாருமே பொறுப்பெடுத்து செய்ய விருப்பம் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என கேட்ட சிவக்குமார் என்பவரை அசிங்கமாக பேசியுள்ளார்.
பாஜகவில் உள்ள எல்லோரையும் தவறாக பேசுகிறார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள்தான் இப்படியெல்லாம் பேசுவார்கள். அப்படி பேசும் இவர் எதிர்க்கட்சியா? மாவட்டத் தலைவராக இருக்க இவருக்கு தகுதி இல்லை. எதிர்க்கட்சியை சேர்ந்தவரை போன்றே இவர் பேசினால், இவர் ஏன் எங்கள் மாவட்ட தலைவராக இருக்க வேண்டும்.
இன்னும் நிறைய ஆடியோக்கள் உள்ளன. வெளியிட பலர் தயங்குகிறார்கள். ஏனென்றால் கட்சியை பற்றி நாங்களே தவறாக பேசக்கூடாது என்பதால். இதற்கு முன் தைரியமாக எல்லாரிடமும் பிரதமர் மோடியின் திட்டங்களை 30 நாட்களாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதை செய்யும்போது தெம்பும் தைரியமும் இருந்தது.
ஆனால், இப்போது போகவே அசிங்கமாக இருக்கிறது. நிறைய யூடியூப் சேனலில் பாஜகவில் மகளிரை தவறாக நடத்துகிறார்கள் என்று வீடியோ வெளியிடும்போது நாங்கள் எப்படி மகளிரை சந்தித்து பேச முடியும். மற்றவர்களிடம் பேசவே தயக்கமாக உள்ளது. இந்த சூழலில் எப்படி கட்சிப் பணி செய்ய முடியும்? இதை தலைமை தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் மாவட்டத் தலைவராக இவர் வேண்டும், அவர் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. யாரை வேண்டுமானாலும் மாவட்டத் தலைவராக போடுங்கள். நாங்கள் கட்சிப் பணி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், கட்சிப் பணி செய்ய தயக்கமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது.
மற்ற மகளிரை அழைக்கும்போது, "உங்களுக்கே இப்படியெல்லாம் நடக்கிறது. பல நாட்களாக கட்சியில், பொறுப்பில் இருக்கும் உங்களுக்கே மரியாதை இல்லாதபோது, நாங்கள் எல்லாம் என்ன செய்வோம் என்று கேட்கிறார்கள்." இது ரொம்ப ரொம்ப இழிவான செயலாக உள்ளது. எனவே மாவட்டத் தலைவர் கலிவரதனை மாற்ற வேண்டும்.
தலைவர் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். எங்களுக்கு அவர் கண்டிப்பாக மாவட்டத் தலைவராக இருக்கக்கூடாது. அவர் இருந்தால் இன்னும் தேர்தல் நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமையாக வேலை செய்ய மாட்டார்கள்." என்றார். உடனே அவருக்கு அருகே இருந்த பெண் நிர்வாகியும் எந்த மகளிரும் வர மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications