விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை.. விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை
விழுப்புரம்: விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மற்றும் உளுந்து, மக்காச்சோளம், மணிலா, கரும்பு உள்ளிட்ட சாகுபடி செய்யப்பட்டுள்ள இதர பயிர்களுக்கு தேவையான யூரியா 2,687 டன், டி.ஏ.பி. 1,400 டன், பொட்டாஷ் 1,158 டன், காம்ப்ளக்ஸ் 5,804 டன், சூப்பர் பாஸ்பேட் 1,826 டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி உரமிடுவதனால் உரச்செலவை குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்போது 2, 3 தடவைகளாக பிரித்து இட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்பிற்கு அதிகபட்சமாக 26 கிலோவிற்கு மேல் நெற்பயிருக்கு இடக்கூடாது. அதிகமாக இடும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிர் சாய்வதற்கும் வழிவகுக்கின்றன.
உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும் கூடாது. ஒரே விவசாயியின் பெயரில் தேவைக்கு அதிகமாக விற்பனை செய்வது, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்வது ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானியத்தில் வழங்கப்படும் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
வட்டார அளவில் ஆய்வின்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications