கொரோனாவால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு இப்படியும் ஒரு பாதிப்பா? ஆய்வு வெளியிட்ட ஷாக் தகவல்
வாசிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கம் மக்களை மனதளவிலும் பெரிதும் பாதிப்பு அடைய வைத்தது. அதேபோல டீன் ஏஜ் வயதினரின் மூளை வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை ஊரடங்கு ஏற்படுத்திவிட்டதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உடல் அளவில் மட்டும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் லாக்டவுன் போடப்பட்டது. பெரும்பாலான நாடுகள் லாக்டவுனை கிட்டதட்ட 2 ஆண்டுகள் வரை அமலில் வைத்து இருந்தன.

டீன் ஏஜ் வயதினர் மத்தியில் பாதிப்பு
இதனால், மக்களுக்கு கடும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களுக்கு மூளையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வன்முறை , புறக்கணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிகராக கொரோனா கட்டுப்பாடுகளும் டீன் ஏஜ் வயதினர் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

சில மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக
ஸ்டாண்ட் போர்டு பல்கலைக்கழகத்தின் பயோலாஜிக்கல் பிரிவின் ஆய்வு இந்த தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூளையின் வடிவத்திலும் மாற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மூளையின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் cortex போன்றவற்றில் சில மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மூளையின் வயது வேகமாக அதிகரிப்பதாக
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 2016 மற்றும் நவம்பர் 2019 ஆம் ஆண்டுகளில் 82 டீன் ஏஜ் வயது சிறுவர்களிடம் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன்களோடு 2020 அக்டோபர் மற்றும் மார்ச் 2022 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஸ்கேன்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், மூளையின் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் மூளையின் வயது வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

அதிகப்படியாக மன அழுத்தங்கள்..
இந்த ஆய்வை நடத்திய இயன் கோட்லிப் என்ற பேராசிரியர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று இளம் வயதினரின் மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். ஆனால், அவர்களின் மூளையில் வெளிப்புற வடிவத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதை நாங்கள் அறிந்து இருக்கவில்லை. லாக்டவுனுக்கு பிறகு அதிகப்படியாக மன அழுத்தங்கள், மனச்சோர்வுகள் என பல்வேறு மனதளவிலான பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

விளைவு என்னவாக இருக்கும்?
இளம் வயதினருடைய கால வயது என்று சொல்லப்படும் chronological age- ஐ விட மூளையின் வயது நிரந்தரமாக அதிகமாக இருந்து கொண்டே இருந்தால் வரும் காலத்தில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெளிவாக தெரியவில்லை. அதாவது 70 முதல் 80 வயதான முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் மாற்றங்களால் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல்களில் பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம். ஆனால், 16 வயதில் இருக்கும் இளம் வயது நபர்களின் மூளை முன்கூட்டியே வயதாகிவிட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பது குறித்து முன்கூட்டியே தெரியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications