மோடி ‘குறி’ வைத்த மைதானம்; மாநாடு நடத்தும் விஜய்! எப்படி இருக்கு இடம்? லைவ் ரிப்போர்ட்
விழுப்புரம்: விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ள இடம் எங்கே உள்ளது? அங்கே மாநாடு நடத்துவதற்கான வசதிகள் உள்ளனவா? இந்த இடம் மாநாடு நடத்தும் அளவுக்கு பெரியதாக உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு களத்திலிருந்து நேரடி விளக்கம் கிடைத்துள்ளது.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற அனுமதி கோரி காவல்துறையிடம் அக்கட்சியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார். மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள இடமானது தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் அனுமதி வழங்கப்படுமா? என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாநாட்டுப் பணிகளை அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். மாநாடு நடைபெறும் இடமானது விக்கிரவாண்டி வி சாலையில்தான் அமைந்துள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலிருந்து சரியாக 5 கிமீட்டர் தூரம் அல்லது திண்டிவனத்திலிருந்து 15 கிமீட்டர் தூரம் பயணித்தால் இந்த மைதானத்தை அடைந்துவிடலாம். சரியாக அடையாளம் காணவேண்டும் என்றால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒரு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அதன் அருகே சின்ன பாதை போகிறது. அதன் உள்ளாகச் சென்றால் மாநாட்டு மைதானத்தைப் போய்ச் சேரலாம்.
இந்த மாநாடு நடைபெற உள்ள சாலையில் உள்ள மணல்களை அகற்றிவருகின்றனர். இரவும் பகலுமாக டிராக்டர்கள் அந்த மணல்களை அள்ளிக் கொண்டு போய் கொட்டி வருகின்றன. இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன. அதற்கு இந்த இடத்தை சீர்செய்து, கூடவே காவல்துறை அனுமதியும் பெற வேண்டும். காவல்துறை எளிதாக அனுமதி அளித்துவிடாது என்றே சொல்லப்படுகிறது. அதேவேளையில் நீதிமன்றம் மூலம் அனுமதி பெறவும் முயற்சிகளை விஜய் தரப்பு சைலண்டாக ஒரு பக்கம் 'மூவ்' செய்து வருகிறது. இந்த மைதானம் மொத்தம் 88 ஏக்கர். தனியார் நிலம்தான். அவரை ஆளும் கட்சித் தரப்பிலிருந்து வளைத்துப் போடலாம் என்றும் சொல்கிறார்கள். அவர் ஜகா வாங்கினால், வேறு இடம் தேடவும் வாய்ப்பு உள்ளது. இங்கே இதற்கு முன்னதாக திமுக மாநாடு கூட நடந்துள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு இந்த நிலம் கட்டாந்தரையாகவே காட்சி தருகிறது. அங்கே நிறைய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளனர்.

அங்கே விளையாடி வரும் இளைஞர்கள் சனி, ஞாயிறுகளில் மட்டுமே இந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆடி வருவதாகவும் விஜய் மாநாடு நடந்தால் ஒரு மாதம் மட்டும் ஆட இடம் கிடைக்காது என்றும் சொல்கிறார்கள். ஆனால், தாங்கள் விஜய் ரசிகர்கள் என்பதால் ஒருவேளை வேறு ஊரில் மாநாடு நடந்தாலும் தாங்கள் சென்று பார்ப்போம் என்றும் தங்கள் பகுதியிலேயே நடப்பது கூடுதல் சந்தோஷம் என்றும் சொல்கிறார்கள். மற்றொரு இளைஞர் பேசும்போது, இந்த மாநாடு நடப்பது எங்களுக்கு நல்லதுதான் என்றும் அதன் மூலம் மைதானத்தைப் புல், பூண்டு, செடிகள் இல்லாமல் சுத்தப்படுத்தித் தந்துவிடுவார்கள் என்றும் அது விளையாட உதவியாக இருக்கும் எனவும் சொல்கிறார்.
"முதன்முதலாக மோடி வருவதற்காக இந்த இடத்தை சரி செய்தார்கள். ஆனால், அவரால் வர முடியவில்லை. இடையில் ஸ்டாலின் இங்கே ஒரு மாநாடு நடத்தினார். அப்போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இருந்தார்" என்கிறார் ஒரு இளைஞர். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இவர்கள் அனைவரும் அளித்துள்ள பேட்டியில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் மொத்தம் 25 ஏக்கரில் ஒரு பார்க்கிங் வசதி செய்யப்பட்டு வருகிறது.

அதே மாதிரி 5 ஏக்கரில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை மறைமுகமாக ஆளும் கட்சி அனுமதி மறுத்தால், சட்டரீதியாக தவெக இதனைக் கேட்டு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இது தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது என அனுமதி மறுக்கப்பட்டால், முன்னதாகவே திமுக மாநாடு நடைபெற்றதற்கான ஆவணங்களை விஜய் கட்சியினர் சமர்ப்பிக்கலாம். அதனால் ஆளும் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படலாம்.
மேலும் முதல் மாநாட்டில் ஏதேனும் சிக்கல் செய்தால், பிற்காலத்தில் விஜய் வளர்ந்து வரும்போது திமுகவுடன் ஒரு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கலாம். அது தேவையில்லாத ஒரு பகையை ஏற்படுத்தும். அரசியலில் எதுவும் நடக்கலாம். கட்சி தொடங்கிய போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் இப்போது அந்த அணியில் முழுமையாக அடைக்கலமாகிவிட்டார். அது போல் நாளை எதுவும் நடக்கக்கூடும். இதை எல்லாம் மனதில் வைத்து கணக்குப் போட்டு திமுக தரப்பு ஒரு முடிவை எடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

மேற்கொண்டு விஜய் தரப்பு தனக்கு ஆதரவான திமுக அமைச்சர்களை வைத்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்கிறார்கள். ஆகவே, எப்படியும் இந்த 88 ஏக்கர் நிலத்தில்தான் மாநாடு உறுதியாக நடக்கும் என்கிறார்கள். ஏனென்றால், மேல் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தாமல் அனுமதி கேட்டு மனு அளித்திருக்க வாய்ப்பே இல்லை. கலந்து பேசிய முடிவு எடுத்த பின்பே வெளிப்படையாக காவல்துறை அனுமதிக்கு வந்திருப்பார்கள் என்று விக்கிரவாண்டி தவெக நிர்வாகிகள் கருத்துச் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications