பொன்முடி மீது சேறு.. 4 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி இரவோடு இரவாக கைது.. பரபர விழுப்புரம்!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள சேதத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணியை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தபோது ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகள் முழுக்க வெள்ளக்காடாக மாறின.

இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். திண்டிவனம் அடுத்த மயிலத்தில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி, நிவாரணப் பொருட்கள் வழங்கவும் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்யவும் இருவேல்பட்டு கிராமத்துக்குச் சென்றார். அப்போது அவர் மீது சிலர் சேற்றை வாரி வீசினர். இதனால் அவரின் வெள்ளை வேட்டி சட்டை முழுவதும் கரையானது.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வெளியேறி காரில் ஏறிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி சேற்றை வாரி வீசியதாக சொல்லப்பட்டது.
ஆனால், அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொதுமக்கள் இல்லை எனவும் பின்னணியில் பாஜக உள்ளது எனவும் திமுக தரப்பில் கூறப்பட்டது. அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபரின் பெயர் ராமர் என்கிற ராமகிருஷ்ணன். இவரது சித்தி விஜயராணி என்பவர் பாஜகவில் உள்ளார் எனவும் அதன் காரணமாக ராமர் என்கிற ராமகிருஷ்ணன் பாஜக அனுதாபியாக செயல்பட்டு வருகிறார் எனவும் தகவல் வெளியானது.

பாஜக நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் மீது சகதியை வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணியை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகரான விஜயராணி, 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் நேற்று இரவு திருவெண்ணெய்நல்லூரில் கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகி விஜயராணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications