பதுங்கி பாய்ந்த சிறுத்தை.. விரைத்து நிற்கும் விழுப்புரம்! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரம்
விழுப்புரம்: மலை காடுகள் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில், சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள சகாதேவன்பேட்டை எனும் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று காலை இந்த கிராமத்தை சேர்ந்த 71 வயதான சிவராஜ் எனும் முதியவர், தனது வீட்டின் பின்புறம் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

சிறுத்தை அடர்ந்த காடுகளிலும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய விலங்கு. விழுப்புரத்தில் பெரிய காடுகளோ, அடர்ந்த மலையோ இல்லாததால் இந்த பகுதிக்கு அது எப்படி வந்தது என்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது. இருப்பினும் புகார் அளித்தவர், தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் விழுப்புரம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனவே அவர் வனவிலங்கு குறித்து தவறான தகவல்களை அளித்திருக்க வாய்ப்புகள் குறைவு என்பதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நேற்று காலை சிறுத்தை தனது வீட்டின் பின்புறம் வழியாக சென்றதாகவும், அதை செல்போனில் படம் எடுக்க மொட்டை மாடிக்கு ஓடிய போது, சிறுத்தை புதருக்குள் சென்று மறைந்து விட்டது என்றும் சிவராஜ் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் வனவர் குணசேகரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு முதற்கட்ட விசாரணையில் இறங்கியது. சிவராஜ் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் சிறுத்தை சுமார் 3 அடி உயரமும் 4 அடி நீளம் கொண்டதாக இருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.
இந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், ட்ரோன் கேமரா உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும், வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் இருந்து திருவண்ணாமலை, செஞ்சி கண்டாச்சிபுரம் வழியாக விழுப்புரத்திற்குள் சிறுத்தை நுழைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் குணசேகரன் தெரிவித்திருக்கிறார்.
விழுப்புரத்தில் உள்ள உடையானந்தல் வனப்பகுதி வழியாகவும், ஆற்றங்கரையின் ஓரம் வழியாகவும் சிறுத்தை வழி தவறி வந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே செஞ்சி பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்கு அடித்து கொன்றதாக புகார்கள் எழுந்திருக்கின்றன இப்படி இருக்கையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பது விழுப்புரம் மாவட்ட மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை சகாதேவன்பேட்டை பகுதியில் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து சிறுத்தையை தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications