பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தினர் உள்ளே அனுமதிக்கப்படாத சூழல் இருந்தது. இதையும் மீறி கடந்த மாதம் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் சென்றதால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் தங்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பட்டியல் சமூகத்தினர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் பொன்முடி, பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் திரௌபதி அம்மன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பட்டியல் இன சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 3 பேர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications