நீட் தேர்வு முடிவுகள்: 720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற விழுப்புரம் மாணவர்! குவியும் பாராட்டுகள்
விழுப்புரம்: நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண்களை பெற்று விழுப்புரம் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு, கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதினர்.

கடந்த மே 30 ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியானது. இதையடுத்து ஜூன் 14 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தமிழகத்தில் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஜெயந்தி பூர்வஜா, ரோகித், ராஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற ரஜ்னீஷ், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ரயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலா தேவி தம்பதியின் மகன் ரஜ்னீஷ். நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற இவர் சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார்.
இவர் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களையும் பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி எடுத்து முழு மதிப்பெண்களை ரஜ்னீஷ் பெற்றுள்ளார்.
இவர் டெல்லி எய்ம்ஸில் பயின்று இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆசை. இதற்காக அதிக பயிற்சி மேற்கொண்டதில் அதிக பலன் கிடைத்துள்ளது. தேர்வுகள் அதிகம் எழுதிக் கொண்டிருந்தாலே அதிக மதிப்பெண்களை எடுக்கலாம் என ரஜ்னீஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications