விழுப்புரத்தில் அதிரடி.. போலீசை தாக்கி தப்ப முயன்ற கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு.. பரபர சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பவித்ரா ஸ்ரீ என்பவருடன் கடந்த 24ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் வழியாக அவர்கள் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் சாலையில் குறைந்த அளவில் மட்டுமே வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இவர்கள் 2 பேரும் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். மேலும் செல்போனை தரும்படி இருவரிடமும் கேட்டுள்ளனர். அவர்கள் செல்போனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் ரமேசை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா ஸ்ரீ உதவிக்கோரி நெடுஞ்சாலையில் ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் மோதி பவித்ரா ஸ்ரீ இறந்தார்.
இதற்கிடையே ரமேஷிடம் இருந்த செல்போனை கொள்ளையடித்துவிட்டு அந்த நபர்கள் சென்றுவிட்டனர். பவித்ரா ஸ்ரீ வாகனத்தில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து ரமேஷ் கதறி அழுதார். இதுதொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் போல் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடித்தவர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது கொள்ளையடித்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உதய பிரகாஷ் என்பதும், அவர் 18 வயது நிரம்பாத சிறாருடன் சேர்ந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து உதய பிரகாசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புலியூர் ஏரிக்கரையில் செல்போனை பதுக்கி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் புலியூர் ஏரிக்கரைக்கு இன்று உதய பிரகாசை அழைத்து சென்றனர். அப்போது உதய பிரகாஷ் போலீசை தாக்கிவிட்டு தப்பித்து ஓடினார். போலீசார் அவரை நிற்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தப்பிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதோடு விரட்டி சென்ற போலீசாரை தாக்கவும் அவர் முயன்றுள்ளார். இதனால் போலீசார் வேறு வழியின்றி தங்களின் பாதுகாப்பு கருதி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் உதய பிரகாஷின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து உதய பிரகாசை கைது செய்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications