கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும்
கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் இரண்டு பிள்ளைகளை பெற்ற மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி இருக்கிறார். இதனை ஏற்காத சம்பத், சென்னை சென்று வடலூர் திரும்பிய மஞ்சுளாவை கோலியனூர் கூட்ரோடு அருகே பேருந்தில் இருந்து இறக்கி தனது இரு சக்கர வாகனத்தில் கண்ணுதோப்பு பாலம் அருக அழைத்து வந்திருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் அருகே அதிக அளவில் மண் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று காலை அந்த இடத்தில் அரை குறையாக புதைக்கப்பட்ட நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றினர். அப்போது பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அந்த பெண் கழுத்தில் இரட்டை தாலி அணிந்திருந்தார். அவர் 2 நாட்களுக்கு முன்பு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள ஓடை வரை ஓடிச்சென்றது. பிறகு திரும்பி மெயின்ரோடு வரை ஓடி நின்று விட்டது.
தொடர்ந்த பெண் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் வடலூர் கல்லுக்குழி ஒ.பி.ஆர். நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி மஞ்சுளா (வயது 35) என்பதும், இவர் மொபட்டில் ஊர், ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மஞ்சுளா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மஞ்சுளாவை கொன்றவர்களை பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகளை கடலூர் எஸ்பி அமைத்தார். போலீசார் முதல்கட்டமாக விசாரணையை செல்போனில் ஆரம்பித்தனர். மஞ்சுளா தனது செல்போனில் அடிக்கடி யாரிடம் பேசி வந்தார் என்ற விவரத்தை முதலில் சேகரித்தனர்.
அதில், மீன் வியாபாரியான நெய்வேலி சேப்ளாநத்தம் காமராஜ் நகரை சேர்ந்த சம்பத் (39) என்பவருடன் அவர் அடிக்கடி பேசி வந்ததுடன், அவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பத்தை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் தான் உண்மை தெரியவந்தது.
சம்பவம் நடந்த அன்னு சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற மஞ்சுளா, கடந்த 27-ந்தேதி இரவு பஸ்சில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், அவரது கள்ளக்காதலன் சம்பத் மஞ்சுளாவின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோட்டில் இறங்குமாறு கூறினாராம்.
அதன்பேரில் பேருந்தில் இருந்து இறங்கிய அவரை, சம்பத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, அதிகாலை 3 மணியளவில் வடலூர் அடுத்த கண்ணுத்தோப்பு பாலம் அருகே வந்துள்ளார். அங்கு பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு சம்பத் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சம்பத் தான் வைத்திருந்த கத்தியால், மஞ்சுளாவை கழுத்தை அறுத்து கொன்று, தர தர வென்று இழுத்து சென்று, மண்ணில் புதைத்து விட்டு சென்றுள்ளார். மணல் காற்றுக்கு பறந்தததால் பாதி புதைந்த நிலையில், மீதி உடல் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பார்த்து போலீசிடம் கூறியதால், சம்பத் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications