அலங்காநல்லூரில் இருந்து அவசரமாக கிளம்பியது இதற்காகத்தான்.. நேராக விழுப்புரம் சென்ற அமைச்சர் உதயநிதி!
விழுப்புரம் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். க.தியாகராஜன் மறைவையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் இருந்து விரைவாகவே கிளம்பிய உதயநிதி ஸ்டாலின், அவசர வேலை காரணமாக சீக்கிரமாகவே கிளம்ப வேண்டியதாகி விட்டது எனத் தெரிவித்திருந்தார்.
அலங்காநல்லூரில் இருந்து கிளம்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விழுப்புரம் சென்று அமைச்சர் பொன்முடியின் தம்பி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின், இந்த துக்க நிகழ்வில் பங்கேற்காத நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், பயணத்திட்டத்தை மாற்றி மதுரையில் இருந்து விரைவாகவே கிளம்பினார் உதயநிதி ஸ்டாலின்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பலியான வீரர் குடும்பத்தினருக்கு அரசு வேலை? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவு
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியும், புகழ்பெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் விழுப்புரத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், "உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்." எனத் தெரிவித்தார்.
உதயநிதி நேரில் அஞ்சலி
இந்நிலையில், மறைந்த டாக்டர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, ரவிக்குமார், சி.வி.சண்முகம், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அலங்காநல்லூரில் இருந்து
மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காலையில் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்ததும், சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதியே கார் பரிசு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அவசரமாக
ஆனால், முன்கூட்டியே அங்கிருந்து கிளம்பினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரை பாலமேடு ஜல்லக்கட்டில் இறந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார். அவசரமாக வேறு ஒரு வேலை வந்ததால் இங்கிருந்து சீக்கிரமாக கிளம்ப வேண்டியதாகி விட்டது எனத் தெரிவித்திருந்தார்.
நேரில் சென்ற உதயநிதி
அங்கிருந்து கிளம்பி விழுப்புரம் சென்று அமைச்சர் பொன்முடியின் தம்பி டாக்டர் தியாகராஜன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகவே பயணத் திட்டத்தை திடீரென மாற்றி அலங்காநல்லூரில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.