விரைவில் வளைகாப்பு.. பணிக்கு சேர்ந்து 3வது நாளில் உடல் கருகிய பட்டதாரி கர்ப்பிணி.. சாத்தூரில் சோகம்
விருதுநகர் : சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான 7 மாத கர்ப்பிணிக்கு இன்னும் சில நாட்களில் வளைகாப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவரது கணவர் ராஜசேகர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை. இங்கு பேன்ஸி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசுகளுக்கு மருந்தை நிரப்பும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதையடுத்து மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
அறைகள் தரைமட்டம்
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள். இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த விபத்தால் அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
7 மாத கர்ப்பிணி
இதில் படுகாயமடைந்த 36 பேர் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் கல்லூரி மாணவி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், நடுசூரங்குடியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி கற்பகவள்ளியும் உடல் கருகி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்சி பட்டதாரி
இந்த கர்ப்பிணி கற்பகவள்ளி பட்டதாரியாவார். பிஎஸ்சி படித்துள்ள இவர் மருத்துவத்துறை பணியாற்றி வந்துள்ளார். குடும்ப கஷ்டத்திற்காகவும் சாத்தூரில் வேறு வேலை கிடைக்காததாலும் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தார். இவருக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றது. அவருக்கு விரைவில் வளைகாப்பு நடத்த கணவர் ராஜசேகர் ஏற்பாடுகளை செய்து வந்தாராம்.
கண்ணீர்
ராஜசேகர் கட்டட வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக ஒரு நாளைக்கு ரூ 200 கூலிக்காக உயிரை பணயம் வைத்து பணிக்கு சென்றுள்ளார் கற்பகவள்ளி. நேற்று நடந்த பட்டாசு வெடித்த விபத்தில் தனது வயிற்றில் இருந்த 7 மாத சிசுவுடன் உடல் கருகி இறந்துவிட்டார். திருமணமான ஒரே ஆண்டில் மகளை பறிக் கொடுத்ததால் அவரது பெற்றோர் கதறுகிறார்கள்.
முதல் நாளிலேயே பலி
கல்லூரிக்கு பணம் கட்டுவதற்காக மாணவி ஒருவர் பணிக்கு நேற்றைய தினம்தான் சேர்ந்தாராம். சேர்ந்த முதல் நாளிலேயே பட்டாசு வெடித்ததில் பலியானார். அது போல் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் இந்த விபத்தில் தனது தாய், தந்தையை பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.