நிம்மதியா குடிக்க கூட வழியில்லை.. செந்தில் பாலாஜி சரக்கு - பரபரப்பைக் கிளப்பிய ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர் : இந்த ஆட்சியில் நிம்மதியாக குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட வழியில்லை, போதை ஏறவில்லை என குடிமகன்கள் குமுறுகிறார்கள் எனப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நின்றால், நடந்தால் என அனைத்துக்கும் வரி போடுகிறது இந்த அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறாரே தவிர மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி; சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் சரி, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என ராஜேந்திர பாலாஜி மர்மமாகப் பேசியுள்ளார்.

அதிமுக பொதுக்கூட்டம்
இன்று பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்.

5 பேர் வளையம்
அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை பயந்து பயந்து இருந்த திமுகவினர் ஜெயலலிதா இறந்த பின்பு பயமில்லாமல் தவறுகளை செய்கிறார்கள். தற்போதைய முதலமைச்சரை சுற்றி ஐந்து பேர் கொண்ட வளையம் இருக்கிறது. அவரை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை.

நிம்மதியா குடிக்க கூட வழியில்லை
இந்த ஆட்சியில் நிம்மதியாக குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட வழியில்லை. போதை ஏறவில்லை என குடிமகன்கள் குமுறுகிறார்கள். அரசு மதுபான சரக்கு வருவதில்லை. செந்தில் பாலாஜி சரக்கு தான் வருகிறது. நின்றால், நடந்தால் என அனைத்துக்கும் வரி போடுகிறது இந்த அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறாரே தவிர மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை.

விடியல் எங்கே?
பட்டாசு தொழில் செய்பவர்கள் மதுபான விற்பவர்கள் போலவும் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் போலவும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஆட்சியில். விடியல் தரப் போராரு என்று பாட்டு மட்டும் போட்டார்களே தவிர தற்போது வரை விடியல் தரவில்லை. கருவரை முதல் கல்லறை வரை உதவிய இயக்கம் அதிமுக.

ஏதோ நடக்கப்போகுது
ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் சேர்ந்து வந்தாலும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. திமுகவை மக்கள் வெறுத்து விட்டார்கள். வரும் தேர்தலில் அதிமுகவை வெற்றியடைய செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications