விருதுநகர் முருகேஸ்வரி.. அத்தனை பேர் இருந்துமா? வேலூர் வசந்தி, ஆரணி மஞ்சுளா.. அசிங்கப்பட்ட ஆபீசர்ஸ்
விருதுநகர்: விருதுநகரில் நடந்த சம்பவமானது, அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதையெல்லாம் பார்த்து தமிழக மக்கள் பெருத்த கவலைக்குள்ளாகி வருகிறார்கள்.
சமீபகாலமாக பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள்.. கடந்த 2 மாதத்திலேயே விஏஓ, தாசில்தார், என முக்கிய பொறுப்பிலுள்ள பெண்களே லஞ்சம் வாங்கி கைதாகியிருப்பது அதிர்ச்சியை தந்துவருகிறது.

பட்டா மாறுதல்: பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி நாகை விஏஓ செல்வி என்பவர் கைதானார்.. ஆரணியில் மஞ்சுளா என்ற சார்பதிவாளர் கைதானார்.. இதேபோல லஞ்சம் வாங்கி வேலூர் வசந்தி என்ற அதிகாரி சிக்கினார்.. அதேபோல, வெறும் 2 ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கி, வருவாய் அலுவலர் திருப்பூர் மைதிலி சிக்கினார்.. இதோ இந்த லிஸ்ட்டில் முருகேஸ்வரி சேர்ந்திருக்கிறார்.
விருதுநகர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெயமுருகன்.. 25 வயதாகிறது.. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதவி, முத்ரா என 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. இந்த 2 பெண் குழந்தைகளுக்கும், தமிழக அரசு வழங்கும் ரூபாய் 50000 உதவித்தொகை பெற, கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.. ஆனால் அவருக்கு நிதி உதவி எதுவும் வழங்கப்படவில்லை.
முருகேஸ்வரி: எனவே, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள, ஊர் நல அலுவலர் முருகேஸ்வரியை அணுகி இதுகுறித்து விசாரித்தார்.. அதற்கு முருகேஸ்வரி 3000 ரூபாய் லஞ்சம் தந்தால்தான், நிதியுதவி கிடைக்க சிபாரிசு செய்வேன் என்று சொன்னாராம்.. 3 ஆயிரம் ரூபாயை தன்னால் தர முடியாத சூழலில் உள்ளதாக ஜெயமுருகன் சொன்னாராம். ஆனால், முருகேஸ்வரி இதற்கு மறுத்து, லஞ்சம் வேண்டும் என்று கறாராக கேட்டிருக்கிறார்.
இறுதியில், 1000 ரூபாய் பெற சம்மதித்ததாக கூறப்படுகிறது.ஆனாலும், இந்த லஞ்சத்தை கொடுக்க விரும்பாத ஜெயமுருகன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரை அணுகினார்.
அதிரடிகள்: உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 1000 ரூபாயை ஜெயமுருகனிடம் தந்தனுப்பினார்கள். இதனையடுத்து விருதுநகர் ஊராட்சி அலுவலகம் சென்ற ஜெயமுருகன், 1000 ரூபாயை முருகேஸ்வரியிடம் தந்தார்.. ஆனால், முருகேஸ்வரி, அந்த பணத்தை கை நீட்டி வாங்காமல், இளநிலை உதவியாளர் லதா வேணியிடம், கொடுக்குமாறு சொல்லியிருக்கிறார்.
அந்த பணத்தை லதா வாங்கியதுமே, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் லதா வேனியை கையும் களவுமாக பிடித்தனர். இறுதியில், முருகேஸ்வரி மற்றும் லதாவேணியை கைது செய்து, விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் சொல்லும்போது, அதிகாரிகள், "விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதிலும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5 லஞ்ச வழக்குகளில் 6 அரசு ஊழியர்கள் உட்பட 7 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர். விருதுநகரில் தமிழக அரசு நலத்திட்டத்தில் பயனாளியாக சேர்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பணியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைதுசெய்தனர்












Click it and Unblock the Notifications